Pages

வலிகள் மறத்துப் போனாலும்.. - கவிதை (11)

வலிகள் மறத்துப் போனாலும்
உதடுகள் மறுத்துப் பேசினாலும்

ஓடு இழந்த வீட்டுக்குள்
வேண்டாத நிலவொளியாய்
நிரம்பி வழிய

ஏனோ நீ வாழும் என்னுலகம்
உயிரோடிருக்குதடி
உறையாதிருக்குதடி

முத்தம் ஈரம் தருமோ?
காற்றில் முத்தமிட்டு முத்தமிட்டு
உதடுகள் காய்ந்ததுதான் மிச்சம்
உன் மார்புச்சூடு தெரிய
இனி நான்
எரிதனலில்தான் முகம் புதைக்க வேண்டும்

அமைதியாய் இருக்கையிலெல்லாம்
உன் சினுங்கல்கள்
உரக்கக் கேட்கும்
உயிரையே கேட்கும்.

உன் நினைவைக்
கருணைக் கொலை செய்ய
வேண்டினாலும்
இறைவன் கருணை எனக்குக் கிட்டாது போலும்.

காலாவதியான கனவுகளும்
கூட உயிர் கவிதயாகுது
வார்த்தைகள் வேண்டா
என்று மன்றாடினாலும்
கோர்வையாய் வந்து விழுகுதடி
என் கவிஞனும் சொல் பேச்சு கேளான்.

No comments: