Pages

பழைய எழுத்து... - கவிதை (3)

எதிலும் சேராத ஒரு எக்காளப் பார்வை
எப்படியும் புரியாத வேற்றுமொழிப் புன்னகை
தவம் புரிந்தேனும் தகுதி கொள்ளப்பார்க்கிறேன்
இவற்றைப் புரிந்து கொள்ள.

நெசமுன்னு நெனச்சிருந்தோமே... - கவிதை (2)



நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

நடந்து போன நாலு வீதி
நம்ம கத கூடி பேசும்
கடந்து போன காத்து கூட
நம்மோட வாசம் சொல்லும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

வாசமுள்ள பூவெல்லாம்
வசமாகும் நம்ம கிட்ட
வண்ணத்து பூச்சியெல்லாம்
வந்து நின்னு கடன் கேக்கும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

சேர்ந்து சமச்ச சோறும் குழம்பும்
அமிர்தமா மாறும்
உயிர்களெல்லாம் நம்ம கிட்ட
உயிர்வாழ வழி கேட்கும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

கூடி விளையாடி நம்ம
குழைந்ததை பார்த்தா
கொழந்த மனசு கேட்டு
கெழமெல்லாம் கேள்வி கேக்குமே

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

முத்தம் குடுக்க மூணு போட்டி போட்டு
முடிஞ்சதும் கொசுறு நான் கேட்க
அங்கமெல்லாம் தவிச்சு
அங்க இங்க எங்கயும் கேக்குமே

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?
என் இந்திய பயணம்

எதிர்பாராதவைகளை எதிர்பார்த்துக்கொண்டே இரு :: இதுதான் வாழ்க்கை நமக்கு மீண்டும் மீண்டும் கற்பிக்கும் பாடம். என் அறிவிற்கேனோ அது எட்டவில்லை என்பது பற்றி வருத்தப்படுகிறேன். ஒவ்வொரு நாளும் எதையாவது அல்லது யாரையாவது எதிர்பார்த்துக்கொண்டே தொடங்குகிறது. இதை மாற்ற இயலுமா என்பது விடை தெரியாத வினா.

சரி. இந்திய பயணம் பற்றி கூற வருகிறேன். நான் கடந்த இருபது நாட்களை இந்தியாவில் கழித்தேன்; குடும்பத்துடன், சொந்தங்களுடன், பழைய நண்பர்களுடன். அடடா! என்ன சுகம்! குடும்ப கலாச்சாரங்களும், இந்திய பழக்க வழக்கங்களும் இன்பத்திற்காகவே என்று தோண்றிற்று. வெளிநாட்டில், மிகுந்த மாறுபட்ட கலாச்சார சூழலில் ஒரு வருடத்திற்கு மேலாக வாழ்ந்த பிறகு நம்முடைய சமுதாயமும், கலாச்சாரமும், பழக்க வழக்கங்களும் மேலும் இனிமையானதாகவே தெரிகின்றன.

வைரமுத்து அவர்களின் படைப்புகள் நிறைய வாங்கி வந்திருக்கிறேன். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் (தமிழ் மொழிபெயர்ப்பு) பாதி படித்திருக்கிறேன் (சென்னையில் வாங்கியதுதான்). அப்பப்பா!! என்ன மனுஷரய்யா அவர்? அதிபுத்திசாலியாக இருந்திருக்கிறார். அன்றைய சமுதாயமும் அவ்வளவு முன்னேறி இருந்திருக்கிறது. சில விஷயங்கள் தற்கால வாழ்க்கைக்கு முற்றிலும் விரோதமாக தெரிந்தாலும், அதை வரலாறாகப் பார்த்தால் பிரமித்தே ஆக வேண்டும்.

என் உறவினர் ஒருவருடன் கொண்ட உரையாடலில் நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன். அவருடன் நான் கிறித்தவம், இந்து மதம், வள்ளலார் பற்றி கொண்ட கலந்துரையாடல் மிக்க மாறுபட்ட கோணத்தில் மதங்களை பார்க்க உதவிற்று. அவர் சில அரிய புத்தகங்களை (திரு. பொன்னம்பல அடிகளாரின் "தமிழ் பகவத் கீதை - பாடல்களும் உரையும்", திரு. முத்து ஐயர் இயற்றிய "தமிழ் பகவத்கீதை பாடல்கள்" மற்றும் "இராமாயண பால காண்டம் - மூண்று பெரும் புலவர்கள் இயற்றியவையின் ஒப்பீடு") எனக்கு பரிசாக கொடுத்தார். அவற்றில் சிலவற்றையாவது கணிணிப்படுத்த வேண்டும் என்பது அவரின் விருப்பம். அதை நான் வெற்றிகரமாக செய்வேன் என்று நம்புவேனாக!

பெண்கள் கையில் அகப்படும் சுதந்திரம் என்பது இருபுறம் கூர் செய்யப்பட்ட கத்தி; அதை ஒருபுறம் அவர்கள் உபயோகமாக பயன்படுத்தினாலும், மறுபுறம் கொலை செய்யவே பயன்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. அது ஏனென்று தெரியவில்லை, ஆயினும் சமீபத்திய நாட்களில் இப்படியே எண்ணுகிறேன். போகப் போகத்தான் தெரியும் நான் என்ன நினைக்கிறேன் என்பது. இப்பொழுதைக்கு தெளிவக நான் இல்லை என்றே கருதுகிறேன். (என்னடா திடீரென்று சம்பந்தமில்லாமல் பேசுகிறான் என்று தோன்றுகிறதா? அது அப்படித்தான்!!)

இவையெல்லாம் பற்றி மேலும் விளக்கமாக வரும் பதிவுகளில் பேசுவோம்.