Pages

இந்து மதமும், இன்றியமையாத சில கேள்விகளும்

இந்து மதம் ஒரு கடல் என்று நாம் பார்ப்பவர்களிடம் சொன்னால், கடலில் கரையேறுவது கடினம் என்று கேலிப்பேச்சு தான் மிஞ்சும். இவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்து போயாயிற்று. இதில் நிஜமான பலவீனம் என்னவென்றால், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு சரியான ஞானம் இல்லை. இதை தவறான நோக்கோடு யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மதத்தின் மீது ஒரு நம்பிக்கையும் நல்ல எண்ணங்களும் இருக்கிறதே தவிர அதை சரியான முறையில் எடுத்துரைக்கவோ, விளக்கவோ அவதிப்படுகிறோம். ஒரு கிறித்தவ நண்பரைக் கேட்டால் - எங்கள் கடவுள் யேசுபிரான்; என் மதம் என்ன போதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் விவிலியம் இருக்கிறது படியுங்கள் என்பார். இஸ்லாமிய சகோதரரைக் கேட்டால் - என் இறைவன் அல்லாஹ்; இஸ்லாமியத்தை தெரிந்து கொள்ள திருக்குர்ரான் படியுங்கள் என்கிறார். இதே கேள்வியை என்னிடம் ஒருவர் கேட்டால்? நான் எங்கள் மதத்தில் நிறைய கடவுளர்கள் இருக்கின்றனர். இவரில் எனக்கு பிடித்தவர் கணபதி என்பேன். ஓஹோ அப்படியா? என்று குழப்பத்துடன் அடுத்த கேள்வி...உன் மதத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால்? அதற்கும் அதே குழப்பத்துடன் ஒரு பதில்...என் மதத்தில் கீதை இருக்கிறது...வேதங்கள் இருக்கின்றன...உபநிஷதங்கள் இருக்கின்றன...இதற்கும் மேலாக பெரியோர் பலர் அருளிச் சென்ற இறைமறைகள் நிறைய இருக்கின்றன என்றால்....கேட்டவர் அடுத்த கேள்வி கேட்காமலேயெ சென்று விடுகிறார். அது அவருடைய குற்றம் அல்ல. என்னுடைய குற்றமும் இல்லை. பின் யாருடையது? இதற்கு யாரும் பொருப்பேற்றுக் கொள்ள இயலாது என்றாலும் இதை சீர் செய்ய ஒரு சிறிய முயற்சியை ஒவ்வொருவரும் மேற்கொள்ளலாம்.

அடுத்த கேள்வி - இப்படி மதத்தை எளிமையாக விளக்கமளிக்க இயலாத நீங்கள், மதத்தில் இன்னும் என்ன இருக்கிறது என்று முழுமையாக அறியாத நீங்கள் எவ்வாறு அதை பின் பற்றுகிறீர்கள்? அது கண்மூடித்தனமானதல்லவா?

மேலும், இன்றைய சமூக அவலத்தில் முக்கியமானது சாதி என்னும் சாக்கடை. அதற்கு வித்திட்டு வழிவகுத்தது இந்து மதம். கீதையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கொக்கரிக்கிறார்கள் பகுத்தறிவுச் சான்றோர்.

இவ்வாறாக பல முனைத் தாக்குதலில் தாக்குப் பிடிக்க இயலாமல் பலர் (என்னையும் சேர்த்து) - அய்யா! இதுதான் நான் நம்புவது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள் இல்லையேல்ஆளை விடுங்கள் என்று சொல்லிவிட்டு தப்பித்து விடுகிறோம்.

இந்த நிலையை சற்றே ஆராய்ந்தால் சில வழிகள் தெரிகின்றன:

நமது மதத்தை பற்றி முதலில் நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். என் மதம் கடல் போண்றது என்று பெருமை சாற்றிக் கொள்வதை விட அது உபயோகமானது.

இன்றைய வாழ்க்கைக்கு என்ன தேவை? இன்றைய சூழ்நிலையில் எவ்வாறாக நம் மதத்தை புரிந்து கொள்வது?

இந்த கேள்விகளை பல நாட்களாக மனதினுள்ளே உரக்கக் கேட்டுக்கொண்டிருந்தேன். இதே கேள்வியை பலரும் பலவாறாக பல நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிண்றனர் என்பதை அறிவேன். பயன்? பயனாக, என்னுடைய சகோதரர் வெங்கட் மற்றும் என் நன்பர்கள் (சங்கர், சுதீப், சந்துரு, ப்ரீதி, வித்யா மற்றும் ஷாலினி) ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். கீதையைப் புரிந்து கொள்வது. தினம் ஒரு 5 பாடல்களை படித்து தெளிந்து கொள்வது மற்றும் இன்றைய வாழ்வுக்கு கீதை எவ்வகையில் பொருத்தமானது..அல்லது எவ்வகையில் கீதையைப் சமகால வாழ்வுக்கு சரியானதாக்கிக் கொள்ளலாம் என்று முயற்சிக்கிறோம்.

இது ஒரு சிறிய முயற்சி. ஆனாலும் இது பயன் தரும் என்று நம்பி எங்கள் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

(இது சம்பந்தமான பதிவுகளில் வரும் கருத்துக்கள் என்னுடையது மட்டுமல்ல. என் நண்பர் வட்டத்துடன் வாதம் செய்கையின் பயனாய் விளைந்தவை. அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்)

இந்த வலைப்பதிவில் இதைப் பற்றி மேலும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இதை நிறைவு செய்கிறேன்.
பழைய நினைவுகளும் புதிய பரிமாணங்களும்

நினைவுகள் என்றுமே இறப்பது இல்லை; மனதை விட்டு அகல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், உறங்குவது கூட இல்லை. பதினேழு வருடங்களுக்கு முன், காவிரிக் கரையில் நடை பழகியதும், கண்மூடி விளையாடியதும், கரும்பு கடித்ததும், இல்லாத வகுப்பில் பொல்லாத ஆசிரியனாகி என் சகோதரியை தண்டித்ததும், புத்தகங்களூடே மயில் இறகு வளர்த்ததும் கூட இன்னும் என் நினைவில் நின்று ஆட்சி செலுத்துகின்றன. அதுபோலவே நம்முடைய குணாதிசையங்களும், எண்ணங்களும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிண்றன. அவை என்னுடனேயே வளர்கின்றன; இவைகள்தாம் என்னை உருவகப்படுத்துகிண்றன. ஒரு சாதாரண பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். அன்றைய காலகட்டத்தில் என பெற்றோர்களும் அவர்களை பெற்றவர்களும் என்ன எண்ணங்கள் கொண்டிருந்தார்களோ, அவ்வாறே நானும் உருவாக்கப்பட்டேன். நியாயமாக என்னுடைய எண்ணங்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாகப் பார்த்தால் இன்னும் நான் பதினைந்து வருடங்கள் பின் தங்கி இருக்கிறேன் என்று எண்ணுகிறேன். இது என்னுடைய கருத்தே ஆயினும், இதில் சிறிதளவேனும் யாவருக்கும் பொதுவாகும் என்றே நம்புகிறேன்.

நினைவுகளில் இருந்து சமகால வாழ்க்கைக்கான எண்ணங்களையும், பழக்கங்களையும் எடுத்து உபயோகிப்பது எந்த வகையில் சரி? என்னுடைய பள்ளிப்பருவத்தில் தட்டச்சு பயன்படுத்திய நான், இன்று கணிணியை ஒரு துணைவியாக்கிக் கொண்டுள்ளேன். நான் பயன்படுத்தும் யாவையும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டுள்ளேன்.

"மாறாதது என் மனம் மட்டும்"

இது எந்த வகையில் நியாயம்?

நான் இன்னும் பழைய பழக்கங்களையும் பழைய எண்ணங்களையும் சுமந்து கொண்டு அதே பார்வையோடு வாழும் இன்றைய இளைஞன். என்னுடைய சுயபரிசோதனை மிக அவசியமான ஒன்றாகப் பட்டது. முடிவில் ஒரு தெளிவில்லாத நிலைக்கு தள்ளப்பட்டேன். மீண்டும் மீண்டும் சிந்திக்கிறேன், ஆயினும் ஓர் தெளிவில்லாமல்.

"வாழ்வில் மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று" என்பது என் நினைவில் ஒலிக்கிறது.

நானும் தயாராகிறேன்; இன்றைய போராட்டத்திற்கு. பழைய எண்ணங்களோடுதான்...புதிய பரிமாணங்கள் பார்க்க முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை முயற்சிகள் தவறில்லை. மீண்டும் மீண்டும் செய்தால் கூட.

நானும் நிச்சயமாக மாறுவேன் என்ற நம்பிக்கையோடு இதை நிறைவு செய்கிறேன்.
முயற்சிகள்

இது பல நாட்களாக மனதில் இருந்த ஒரு முயற்சி. இந்த வலைப்பதிவை உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கினேன்.
எப்போதும் சிந்தனைகள் பிறப்பதுடன் சரி. அதை வெளிக்கொணர நினைத்ததை விட மேலான ஈடுபாடு தேவைப்படுகிறது. பல மாதங்களுக்கு பிறகு இந்த முயற்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை முயற்சிகள் மீண்டும் உயிர்பெறுவதில் தவறில்லை. மாறாக முயற்சிக்கான எண்ணம் தீர்ந்து போகும் வேளையில் தான் முயற்சிகளுக்கு இறுதி சடங்குகள் தொடங்கப்படுகின்றன. என் முயற்சிகள் இன்னும் உயிருடன் இருப்பதாகவே உணர்கிறேன்.

என் குரல் - கவிதை(1)

நான் ஒரு சிசு. இலங்கைக் குடி சிசு (நாளைய போராளி என நினைவில் நிற்க).
என் சுய வாக்குமூலம் இது.

தண்ணீர் குடத்தில் மிதந்து கொண்டிருக்கையில்
மூழ்காத சில எண்ணங்கள்.
இன்னும் சில நாட்களில் அவதரிக்கப் போகிறேன்.
உலகம் பார்க்க உயர்ந்த ஆசை ஏதுமில்லை.
நான் இருக்கப்போகும் உலகமோ கலகம் கொண்டதாயிற்றே.

தவறு செய்துவிட்டாள் என் அன்னை.
கருவாகத் தரித்து விட்டாள் என்னை.
இதுவரை என் காதுகளைத் துளைத்தவை எல்லாம்
துப்பாக்கிச் சத்தங்கள் தாம்.
அலறல்கள் என்ன இவர்களுக்கு ஆனந்தச் சங்கீதமோ?

அப்பப்பா!
ஒரு நாளில் எத்தனை முறை கொதிக்கும் என் தாயவளின் ரத்தம்?
புதை வெடிகள் எங்கு தன்னை புதைத்திடுமோ என்று...
நடக்கையில் எல்லாம் நான்மடங்கு துடிக்கும் அவள் இதையம்.

சுதந்திரம் என்று இவர்கள் கட்டியது எல்லாம்
சுடுகாடுகள்தாம்.
மனிதராயிருக்க மறந்து போயிற்றாம் இவர்க்கு.
பழைய கதை பேசி, பழி தீர்க்க எண்ணி, பிணவறை
பெருக்குவார் இவர்.
பிணம் புதைக்க தனியொரு தேசம் கேட்பார் நாளை.

பூக்கள் மலராதோ இந்த தேசத்தில்? புன்னகை தவழாதோ?
இன்னும் எங்களுக்கு மட்டும் தான் ஆயுதப் பயிற்சி இல்லை.
நல்லவேளை அது இயலாததாயிற்றே!
இயலுமாயின், என் தாயின் கருவறை ஆயுதக் கிடங்காகியிருக்கும்.

என் நாளையை நினைத்தால் சுமையாயிருக்கிறதெனக்கு.
பாவம் என் தாய், அவள் அதையும் சேர்த்துத் தானே சுமக்கிறாள்.
நான் உலகம் அடைகையில், கருணை கற்றுக்கொள்ளேன்.
கொலை செய்வதென் பிறப்புரிமை ஆகிவிடும்!
கொல்லப்படுவதென்பது வாழ்க்கை நியதியாகிவிடும்.
என்ன விந்தையடா! இவ்வுலகில் எதிர்காலம் அறிந்தவர் சொற்பமாயிற்றே.

அவ்வகையில் மட்டும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.
மேற்கூறியவையால் நான் தற்கொலைக்குத் தயாராகிறேன்.
ஆம் கருவிலேயெ!