Pages

ஒரு முகம்.. ஒரு பெயர்... ஒரு முகவரி...

இன்று எனக்கு ஒரு தபால் வந்தது. அனுப்பியவர் முகவரி ஏதுமில்லை. பிரித்துப் பார்த்தால் என்னுடைய முக்கியமான காகிதம் ஒன்று இருந்தது. அதை நான் எங்கோ தவற விட்டிருக்கிறேன். அதைக் கண்டெடுத்தவர் எனக்கு அனுப்பியிருக்கிறார். பெயரேதும் இல்லாமல், அடையாளம் சொல்லாமல். அடையாளத்திற்கான தேவை என்ன என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அதில் ஒரு வரி மட்டும் எழுதியிருந்தார்..' இது உங்களுக்கு பயன்படுமென்று நினைகிறேன்..' என்று. அவருக்குத்தான் எத்தனை கருணை. இது ஒரு சாதாரண செய்கையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கும் வேகத்தில் தன்னைத் தவிர எதையும் சிந்திப்பதற்கு மக்களுக்கு நேரமில்லை. இத்தகைய நிலையில் ஒருவர் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் மற்றும் ஐம்பது சென்ட் செலவு செய்து எனக்கு அனுப்பியிருக்கிறார். அதை நான் மிகப் பெரிய செயலாகக் கருதுகிறேன். அவர் எப்படியிருப்பார், என்ன செய்வார் என்று யோசிக்க நினைத்தேன். எனக்கு அவருடைய கையெழுத்தைத் தவிர குறிப்பேதும் இல்லை. அவர் எனக்கு எந்த விதத்திலும் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைத்திருப்பார் போலும். நான் இன்னாரென்று அடையாளப் படுத்தியிருந்தால், நான் ஒரு முறை நன்றி சொல்லியிருப்பேன். ஆனால் அதில் அவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை போலும். ஆக, அடையாளமற்றுப் போனதில் அவர் எனக்கு இன்னும் நல்லவராகவே இருக்கிறார். அவர் என்ன செய்கிறார் அல்லது அவரது முகம் எப்படியிருக்கும் அல்லது எங்கே வேலை செய்கிறார் என்று ஏதாவது தெரிந்திருந்தால் என்னுடைய எண்ணம் மாறியிருக்க வாய்ப்புண்டு.

தெரிந்த முகங்களை விட, பெயர்களை விட, உருவங்களை விட, அடையாளமில்லாத அருவமான மனிதர்கள் என்னைக் கவர்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களும் அப்படியே. இது ஒரு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையைத் தருகிறது. தெரிந்த முகங்களிடம் தான் எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. என்னிடம் பலர் பலவற்றை எதிர்பார்க்கிறார்கள். இவை வாழ்வின் ஏமாற்றங்களை எனக்கு அறிமுகப்படுத்துகின்றன. கோபம், வஞ்சம், பொறாமை என மனித வாழ்க்கையின் சகல அசுத்தங்களையும் இந்த எதிர்பார்ப்புகள் எனக்குள் ஏற்படுத்துகின்றன. அந்த முகமும், பெயரும் தெரிந்ததனாலேயே நான் அவர்களிடம் யாசிப்பவனாகி விடுகிறேன்.

எந்த உறவாயினும் சரி, அது தொடங்கும் போது பனியிலிருந்து உருகும் நீர் போல, வானிருந்து வரும் மழை போலத்தான் தூய்மையாயிருக்கிறது. போகப் போக, என் மனதில் பல எதிர்பார்ப்புகள். எவ்வாறென்று நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. இது உறவுகளுக்கு மட்டுமல்ல; மொத்தமாக மனித உயிரின் தேடல் எதிர்பார்ப்புகளில் தான் தொடங்குகிறது; ஏமாற்றத்தில் நிறைவுறுகிறது.

வெற்றியின் ரகசியம் போல தோல்விக்கும் ஒரு ரகசியம் உண்டு. அது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் நாம் அதை உணர மறுக்கிறோம். நாம் வாழ்வின் தோல்வியின் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமானல் நம் எதிர்பார்ப்புகளைப் பற்றி சிந்தித்தால் போதும். எத்தனையோ சந்தர்ப்பங்களில் இந்த உண்மை நம் கண் முன்னே வந்து கண்ணத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டுப் போகும். ஆனால் அது அடுத்த நொடி என் அறிவிலிருந்து அகற்றப்பட்டுவிடும். அதுவும் எத்தனை முறை? ஆயிரமாயிரம் முறை; என் வாழ்வின் எல்லா நிமிடங்களிலும் நான் சந்தித்த உண்மை; ஆனால் உணர மறுக்கும் உண்மை.

இன்று என் தோல்விகளைப் பட்டியலிட்டுப் பார்க்கிறேன். என் தந்தையின், தாயின், உடன் பிறந்தோரின், நண்பனின், காதலியின், உறவுகளின் தோல்விகளையும் சேர்த்துத் தான். எல்லாருடைய தோல்விக்கும் ஒன்றே காரணம். அது எதிர்பார்ப்புகள்.

நானும் ஒரு நாள் இந்தப் புற உலகின் அடையாளங்களிலிருந்து விடுபட்டு, அருவமாக விரும்புகிறேன். அது என்னில் இருந்து என்னை எனக்கு எடுத்துக் காட்டும். அதற்காகக் காத்திருப்பேன்.

மீண்டும் சந்திப்போம்.

முட்டாள் மூவர் (சிறுகதை முயற்சி)

வாலிபம் மிக விசித்திரமானது. வசீகரமானது. உலகில் எல்லாமும் வசீகரமாகத் தோன்றும் காலம். ஒளிக்கற்றைகளுக்கு முன்போ, பின்போ இருந்த இருள் திட்டுக்களை அது என்றுமே காண்பதில்லை. எல்லாமும் அதை வசீகரிக்கும். எல்லாவற்றையும் எளிதில் வசீகரப்படுத்தும். காரண காரியங்கள் எதுவும் தேவையில்லை. அன்றுதான் அவளை முதன்முதலாகப் பார்த்தேன். பேருந்தில் பக்கத்து இருக்கையில், மெலிதான செயற்கைப் புன்னகையோடு வந்தமர்ந்தாள். புன்னகை செயற்கையாய் இருந்தாலும், அந்த மெலிதான இசைவு என்னவோ என்னை எளிதில் ஆட்கொண்டுவிட்டது.

பொதுவாகப் பேருந்துப் பயணங்களில் நம் பக்கத்தில் அமர்வது யாரோ என்ற எதிர்பார்ப்பு இருக்கும். எப்போதும் ஜன்னல் இருக்கையில் அமர்வது ஒன்றே குறி. ஏனோ தெரியவில்லை. சிறு வயதிலிருந்து அந்த பழக்கம். இப்போதும் அது தொடர்கிறது. நான் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறேனோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தினமும் நான் காணும் காட்சி நான் மட்டும் அப்படி அல்ல என்பதைப் புரிய வைத்தது. அவ்வளவு பெரிய பேருந்தில் வெறும் பத்து பதினைந்து பேர் இருந்த்தாலும், அவ்வளவு பேரும் ஒரு தனி இருக்கையில் தான் இருப்பார்கள். ஜன்னலுக்குப் பக்கத்தில். அப்படிப்பட்ட தனிமை வேண்டியிருக்கிறது. அதோடு, ஜன்னல் தரும் பார்வை மிக முக்கியம். என் கண்கள் பேருந்த்தைவிட வேகமாகப் பயணிக்கும். என்னைக் கடக்க முயற்சிக்கும் காற்று என் கண்களையும், நாசிகளையும் துளைத்துச் செல்லும். வேகமாக பின்னோக்கிப் பயனிக்கும் தார் சாலை ஒரு மாயாஜாலம். நான் மாயைகளைப் பெரிதும் விரும்புகிறேன். என் கண்களைக் கட்டிப்போடவே விரும்புகிறேன். கண் திறந்து கொண்டே தூங்க வேண்டுகிறேன். உண்மையைப் புறம் தள்ளவே நினைக்கிறேன். ஏமாற்றப்பட ஏங்குகிறேன். இசை, மொழி, காதல், காமம், மற்றும் பிற எல்லாம் தரும் உணர்ச்சிகளில் மெய் மறக்கவே விரும்புகிறேன். சொல்லப்போனால், எனக்கும் போதையின் அடிமையாய் இருப்பவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. பேருந்துப் பயணங்களில் நான் காணும் பெண்கள் எல்லாரும் என்னைப் பார்ப்பதாகவே நினைத்துக் கொள்வேன். அவர்கள் என்னிடம் வந்து பேசினால் என்ன சொல்வது என்பது வரை தயார் செய்து கொள்வேன். அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்வேன். அது சாத்தியமில்லை. ஆனால் நான் என்னை ஏமாற்றிக் கொள்வதில் பேரானந்தம் காண்பவன்.

அவள் என் பக்கத்தில் வந்தமர்ந்ததும் மிக்க மகிழ்ச்சி. இது போன்ற சமயங்களில் நானாகப் பேச ஆரம்பிப்பது கிடையாது. ஓரக்கண்ணால் பார்ப்பதோடு சரி. எப்போதும் போல, அவள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள் என்ற பிரம்மை வேறு. அவள் பேசினால் என்ன பேசுவது என்று யோசித்தாகிவிட்டது. ஆனால் பேச்சைத் துவக்குவது மட்டும் கிடையாது. அது ஆணென்ற கர்வமா? இல்லை, பார்க்கும் பெண்கள் எல்லாரையுமே காதலிகளாக பாவிப்பதால் ஏற்படும் பதட்டத்தாலா? என்பது தெரியாது. கர்வமாகக்கூட இருக்கலாம். என் சமுதாயமும், வாழ்க்கை முறையும் அப்படியே என்னை வார்த்திருக்கிறது. அறியப்படாமல் இருந்தாலும், ஆண்மகனின் ஒவ்வொரு செயலிலும் அந்த ஆணவம் ஒளிந்திருப்பது சாத்தியமே. சிலர் அதை மறைக்க முயற்சிப்பார்கள். சிலர் பொய்யாக மறுக்க முயற்சிப்பார்கள். நான் எதையுமே முயல்வதில்லை. ஏனென்றால், அது என்னுடைய 'நான்' என்பதில் இரண்டறக் கலந்து விட்டது. நானும் அதை அழிக்க முயற்சி செய்யலாம். வாலிபத்தில், அதற்கான நேரம் கிடையாது. வீண் முயற்சிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

அவள் பேசத்துவங்கிய பிறகுதான் தெரிந்தது, அவளும் நானும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறோம் என்று. மிகவும் சந்தோஷப்பட்டேன். அற்ப சந்தோஷம். அவள் ஒன்றும் பேரழகி இல்லை. அதற்காக மோசமான அழகும் இல்லை. என் வசதியைப் போன்றே நடுத்தரமானது. அவள் புன்னகைப்பது, ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவள் செலவழிப்பதைப் போன்றே இருக்கும். புன்னகையைச் சேமித்தே செலவழிப்பாள் போலும். ஓடை சில கற்களைத் தாண்டிச் செல்லும் போது ஏற்படும் சிறிய சலசலப்பைப் போன்றதொரு சோகம் அவள் முகத்தில் இழையோடியது. அதை மறைக்க இந்த கஞ்சத்தனமான புன்னகை போதவில்லை. இதை எண்ணிக் கொண்டிருக்கும் போதே, நாங்கள் இறங்கும் இடம் வந்து விட்டிருந்தது. மீண்டும் சந்திப்பதாகக் கூறி அவள் வேறு வழியில் சென்றாள். அவள் அலுவகக் கட்டிடம் எங்கே இருக்கிறது என்ற விவரம் கூட கேட்காமல் விட்டுவிட்டேன். ஒரே அலுவலகம்தானெ என்ற நம்பிக்கை என்னை கவலையிலிருந்து காப்பாற்றியது.

அன்றய நாள் முழுவதும் அலுவல் மிக பரபரப்பாக இருந்ததால் மற்றது எதுவும் சிந்தனையில் இல்லை. வீடு வந்து, உணவருந்த்திப் படுக்கைக்கு வந்தாயிற்று. ஏனோ தூக்கம் வரவில்லை. இன்று நான் சந்தித்த பெண் நினைவிற்கு வந்தாள். மீண்டும் நினைவிற்கு வரும் அளவிற்கு ஒன்றும் அவள் அழகி இல்லையே. பின் ஏன் நான் அந்த பெண்ணைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணமாவது இருந்தாக வேண்டும். எனக்கே தெரியாமல் ஏதாவது ஒன்று என்னைக் கவர முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இது சாத்தியமே இல்லை. சில நேரங்களில், நம் விருப்பு வெறுப்புகளை நாமே அறிந்து கொள்வது கடினமாவதுண்டு. நான் யார் என்பதில் தொடங்கும் விஷயம் அது. என் மனதை நானே கட்டுப்படுத்துகிறேன் என்று நம்பினால் என்னைத்தவிர இந்த உலகத்தில் பெரிய முட்டாள் யாருமில்லை என்பதை அறிவேன். என் சமூகமும், சூழலும், மனிதர்களும், தேவைகளும், எல்லாவற்றிற்கும் மேலாக, ரசயனங்களும் என்னை, என் மனதை, என் மூளையை இயக்குகின்றன. நான், என் மனது, என் மூளை என்று பிரித்துச் சொல்வதில் தவறில்லை. இவற்றிற்கிடையே சிறிய ஒற்றுமையே உண்டு. சில எல்லைகளுக்குட்பட்டு, இவை எல்லாம் ஒன்றாகும். பிறிதொரு தளத்தில் இவை சிதறுறும். என்னைத்தவிர எல்லாமும் என்னை இயக்குமளவிற்கு நான் தாழ்ந்துவிட்டேன். மரங்களும், செடிகளும், பறவைகளும், விலங்குகளும், இன்னும் சுயத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். நான் மட்டும் என் ஆறாவது அறிவை அறிவித்துக் கொண்டு வீழ்ந்து கொண்டிருக்கிறேன். என் எதிரிகளே என்னை இயக்குகிறார்கள்.

அவளைப் பார்த்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. அவள் முகம் என் மனத்திரையில் இருந்து விலகத் துவங்கிய போது, மீண்டும் எதிர்ப்பட்டாள். என்ன மாயம்? என் மனதில் இருந்து விலாகமல் இருக்கவே காலம் அவளை மீண்டும் அனுப்பி வைத்ததாக நினைத்தேன். இம்முறை, கொஞ்சம் அழுத்தமான புன்னகையுடன் உரையாடல் தொடங்கியது. இருவரும் சேர்ந்து மதிய உணவிற்குச் சந்திப்பதாக முடிவு. அன்றிலிருந்து தினமும் மதிய வேளையில் சந்தித்துக் கொள்வது வழக்கமாய் ஆகிவிட்டது. நாளடைவில் அது மாலை வேளையிலும் தொடந்தது. தொலைபேசியில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது கடமை. காலம் செல்லச் செல்ல எங்கள் உறவு தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொருமுறையும், அது முன்னையும் விட அழுத்தமாகவே இருந்தது.

அன்று மாலை சீக்கிரமே வந்து விட்டிருந்தது. தூறலின் இடையே நுழைந்து வரும் காற்று என்னை குளிர்வித்தது. சூடாக ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் அவளுக்காகக் காத்திருந்தேன். வந்து விட்டாள். என்றைக்கும் இல்லாத அளவு இன்றைக்கு அவள் என்னைச் சுண்டி இழுத்தாள். மழையில் நனைந்திருந்ததால், அவளின் தேகம் ஆடையை விழுங்கியிருந்தது. என் மனதின் ஓரத்தில் குப்பையைப் போன்று குவித்து வைத்திருந்த நல்லவற்றை எல்லாம் அபகரித்திருந்தது. என் மனப்பேய் எழுந்து ஆடத் துவங்கிவிட்டதன் அறிகுறி தென்பட்டது. மனதில் தோன்றும் சலனம், கையை நீட்டிக் கொண்டே வேண்டாம் என்று சொல்லும். அப்பட்டமான கபடம் அது. சலனம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத் தயங்கும். ஆனால், அது கர்ப்பம் போன்றது. காலம் செல்லச் செல்ல தன்னால் வெளியே தெரியும். இந்த அசிங்கத்தின் நிர்வானம் நாணம் என்னும் ஆடை தேடும். சமயங்களில் வெற்றியும் பெறக்கூடும். அவளுக்கும் இவையெல்லாம் தோன்றியிருக்க வேண்டும். இல்லையெனில், என் பார்வை அவளை விழுங்கும் போது அமைதியாய் அனுமதித்திருக்க மாட்டாள். இரண்டடி இடைவெளியில் நடந்தவள், அருகில் வந்து கை கோர்த்திருக்கமாட்டாள்.

காமத்தீ உடலை ஆக்ரமிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. காமம் கடல் போலும். கடலுக்கு இந்த மண்ணின் மீது தீராத பற்று. இந்த உலகையே விழுங்க முயற்சிக்கிறது. எவ்வளவு மண்ணை விழுங்கினாலும், மீண்டும் கரையைத் தொடாமல் இருப்பதில்லை. ஆம், சதைப் பிண்டங்களின் மீது தீராத காதல். காமம் தீர்வதில்லை. காமம் தோற்பதில்லை. காமம் மறைவதில்லை. காமத்தின் பசி தன்னையே கூட விழுங்க முயற்சிக்கும். விழுங்கவும் கூடும். தன்னையே புசித்து, அது முன்னை விடவும் பலமானதாகவே மீண்டும் பிறக்கும். அவள் கைகோர்த்தவுடன், எங்கள் பிடி தானாகவே இறுகிக் கொண்டது. இயந்திர மனிதனைப் போல இயங்கினேன். காமம் கொடுத்த கட்டளைகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டிருந்தேன்.

இருவரும் தனியான இடத்தில் ஒன்றானோம். காமத்தின் ராஜ்ஜியத்தில் பிரஜைகள் பேசக்கூடாது. மௌனமாய், அமைதியாய் நாங்கள் ஆவேசமானோம். கைகள் எதைஎதையோ தேடிக் கொண்டு அலைந்தன. அவசர கதியில், திருட வந்தவனைப் போல ஏதாவது கிடைத்தால் போதும் என்பது போல இருந்தது அந்தத் தேடல். பலமாக வீசும் காற்றுக்கு, நேற்றைய உதிர்ந்த இலைகளுக்கும், இன்று பூத்த பூவிற்குமான வித்தியாசம் தெரிவதில்லை. அது எல்லாவற்றையும் சேர்த்தே அடித்துச் செல்லும். அது போல இருந்தது என் காமம். அவளுடையது, சற்று வித்தியாசமாய் இருந்தது. அவள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்பவளாய் இருந்தாள். அவள் கொடுப்பவளாயிருந்தாலும், அதில் பெருமகிழ்ச்சி அடைபவள். கொடுப்பது போன்று கொடுத்துப் இரட்டிப்பாகப் பெறுபவள் போலும். அவள் ஆழ்ந்து அனுபவித்திருந்தாள். வார்த்தைகளும், புன்னகைகளும் மட்டுமே கொண்டிருந்த உதடுகளுக்கு முத்தங்கள் பரிமாறப்பட்டன. பந்தியில் கூச்சமில்லாமல் கேட்டுக் கேட்டு உணவருந்துவதைப் போல மீண்டும் மீண்டும் மீண்டும். எங்களின் மூச்சுக்காற்று, சற்றே ஓய்வு வேண்டுமென்று மன்றாடியது.

நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு ஆயத்தமான போது, ஒரு இடம் தேவைப்பட்டது. அவளுடைய வீட்டிற்கு விரைந்தோம். ஆடைகளைக் களைந்து கொண்டே கட்டிலில் குதித்த போது, ஏதோ தட்டுப்பட்டது. அவசரத்தில், இடது கையால் தள்ளிவிட்டேன். கண்ணாடி போட்ட புகைப்படமொன்று கீழே விழுந்து நொறுங்கியது. அது என் மனத்தையும் சேர்த்தே நொறுக்கியது. கணவனைப் பிரிந்து வாழ்பவள் போலும். மேல் நோக்கி எழுந்த புகை போல, என் காமம் சட்டெனத் தொலைந்தே போனது. வேலை இருப்பதாகச் சொல்லி உடனே கிளம்பிவிட்டேன். அவள் வீட்டை விட்டு வெளியேறும் முன்பே, என் முன்னாள் காதலிகள் வரிசையாக என் கண்ணில் தென்பட ஆரம்பித்தார்கள். நான், என் மூளை, என் மனது மூவரும் முட்டாளானோம்.

சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு...

சிறு வயது கடந்த பிறகு நான் கண்டு கொள்ளாத, என் நினைவிலிருந்து அகன்ற சாப்பாட்டு சமாச்சாரங்கள். அமெரிக்கா வந்த பிறகு ரொம்ப சுத்தம். விளையாட்டாக ஒரு நண்பரோடு பட்டியலிட ஆரம்பித்த போது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அவரும் அவர் பங்குக்கு சொல்லிக் கொண்டே வந்தார்.

1. குச்சி மிட்டாய்
2. தேன் மிட்டாய்
3. பஞ்சு மிட்டாய்
4. ஜவ்வு மிட்டாய்
5. குச்சி ஐஸ்
6. பால் ஐஸ்
7. குல்ஃபி ஐஸ்
8. சோன் பப்டி
9. மசலா காரக் கடலை
10. இளந்தைப் பழம்
11. இளந்தைப் பொடி
12. மாங்காய் வித் பொடி
13. பெப்ஸி ஐஸ்
14. ஜிகிர்தண்டா
15. சேமியா ஐஸ்
16. பொட்டலம் (பக்கோடா, மெது பக்கோடா, காராசேவு... ஒரு ரூபா)
17. வெள்ளரிப் பிஞ்சு வித் பொடி
18. கொய்யாப்பழம்
19. முந்திரி (பன்ருட்டி பஸ்டான்ட்)
20. வத்தல் (ஒன்னு 5 பைசா)
21. பூமர் பப்புள் கம்
22. சென்டர் ஃப்ரெஷ்
23. கடலை மிட்டாய்
24. பொறி/ பட்டானி
25. கல்கண்டு
26. எக்ளேர்ஸ் (50 பைசா)
27. ஆசை சாக்லேட் (25 பைசா)
28. காஃபி பைட் (50 பைசா)
29. பொவன்டோ
30. காளி மார்க் ஜிஞ்சர் சோடா
31. தேங்காய் பன்


இன்னும் நிறைய....

உங்கள் நினைவிலிருப்பவை இங்கே இல்லாமலிருந்தால் பின்னூட்டத்தில் எழுதவும்.