Pages

புதியது எதுவும்

நினைவென நகலென நிறைந்தது நகர்ந்தது
சரியென தவறென இருந்தது இறந்தது

உயிரென உடலென நினைந்தது மறந்தது
உறவென வரவென வருவது போவது

தருவன பெறுவன இருந்தது இருப்பது
செய்வன வருவன செய்தது வந்தது

புதிரென இருப்பதும் புதிரல்லவே
புதியது எதுவும் பழையதுவே

எல்லாம் கோணல்

நான்மறை நல்கிய
நானுறை மனதில்
பேயுறைந்தது மேனோ?

ஆதியின் பாதி தின்று
மீதியின் மீதுறை
போதத்தின் பாதகம்
வேதத்தின் குற்றமோ?

ஓதுவான் ஒழுக்கம்
ஒழுகிலான் போது
ஓதியதும் எது?
ஒழுகியதும் எது?

மெய்யும் மெய்யில்
உய்யும் பொய்யில்
காணும் கானல்
எல்லாம் கோணல்

தண்ணீரில் எழுதியதோ?

மழையின் துளியின் இடையில்
வெளியின் துளையில்
வெயிலின் அலையில்
நுழைந்து கடக்க வேண்டுகையில்

இடையே இடையே
இடம் ஒன்று தேடி
தடையே இல்லா தடம் ஒன்று நாடி
விடையே இல்லா வினாக்களோடு
அலைந்து கொண்டிருக்கையில்

தனியே தனியே கூடிக் கூடி
தவித்து தவிர்த்து தகர்ந்து சேர்ந்து
தேடித் தேடித் தொலைந்து தவிக்கையில்

என்னில் உள்ளது காமம்
எண்ணம் கொண்டது பொருள்
உடலிருந்து சிந்தனை வரை
மனமிருந்து மானுடம் வரை
எத்தனையோ இருக்க

இவையில்லா நானும் நானல்ல
நானில்லா நானும் நானல்ல
தன்னில் உள்ளது
தண்ணீரில் எழுதியதோ?