Pages

சென்னை சட்டக்கல்லூரி - தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள்

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்திருக்கும் சம்பவங்கள் நம் சமுதாயத்தை மீண்டும் ஒரு முறை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. சில மாணவர்களோடு சேர்த்து நீதி தேவதையும், கலைமகளும் கொலை செய்யப்பட்டிருப்பது நம் தமிழ்ச் சமுதாயத்தின் பெருத்த அவமானம். இது போன்று நடப்பது முதல் முறை இல்லை என்றாலும், நிகழும் பொழுது மிக விகாரமாகத்தான் தெரிகிறது. அவர்கள் நடத்திய வெறியாட்டத்தைப் பார்க்கும் போது அவர்கள் உண்மையாகவே மாணவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் தமிழக காவல்துறையின் கையாலாகத்தனத்தையும், அரசியல் அழுக்குகளையும் காண்பிக்கிறது. அவர்கள் உண்மையிலே மாணவர்களாக இருந்தால், கலைமகளை களங்கப்படுத்திய குற்றம் இந்த தமிழ்ச் சமுதாயத்தைச் சேரும். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த வெறியாட்டம் தமிழக சட்டத்துறையின் லட்சணத்தையும், அதே சமயம் நாம் இனி சட்டத்தின் துணையை நாடினால் நியாயம் கிடைக்காது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சம்பவத்தைப் பற்றி சட்டசபையில் விவாதிக்கும் போது முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும், அதனால் திரு. துரைமுருகன் பதில் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை காவல்துறை உயரதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் குற்றம் நடக்கும் போது வேடிக்கை பார்க்கும் அவலத்தை அரங்கேற்றிவிட்ட பிறகு என்ன செய்தாலும் அது தீர்வாகாது. காவல்துறை இவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமே நம் கண்களுக்கு புலப்பட்டிருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.

அதேவேளை, இந்த கலவரம் நடந்த நேரத்தை சற்றே உற்றுப் பார்த்தால் இது ஒரு வேளை அரசின் வேலையாகவே இருக்குமோ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. இலங்கையில் தமிழர் பிரச்சனை உச்ச கட்டத்தை அடையும் வேளையில், திரு. கருணாநிதி அவர்களின் சாமர்த்தியமான ஏமாற்று வேலை சில நாட்கள் முன்பு அம்பலமானது. அவர் தமிழர் போர்வையில் இத்தனை காலம் அரசியல் நடத்திவிட்டு தமிழனுக்கு பச்சைத் துரோகம் செய்யத் துணிந்து விட்டார் என்பது தெரிகிறது. தமிழகம் ஈழப் பிரச்சனையில் கொதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் ஒன்றைக் கிளப்பி திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும்.

கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதைக் கேட்க விரும்புகிறேன்:

கலைமகளுக்கும், நீதி தேவதைக்கும் பாதுகாப்பும் நீதியும் இல்லை என்றால் நீ எதற்கு?

தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள். வெட்கித் தலைகுனிகிறேன்.

புதுச்சுவை - கவிதை (22)

சாமியாரின் மரச்செருப்பு பூசையில. வயசான
மாமியார் வீட்டு மூலையில.

*****************************

வெள்ளை நூல் அது புனிதம்
கொள்ளை போனது மனிதம்.

****************************

சாமிகளுக்கெல்லாம் பாலில் குளியல்
பூமியில் பட்டினிச் சாவுக் குவியல்.

****************************

கங்கை நதி தேசிய மயமாக்கம்
அரசியல் பாவங்கள் கரைக்கப்பட.

****************************

பாரதத்தில் ஏற்றமாம் பாஞ்சாலிக்கு.
பாரதத்தில் அது ஏனோ குற்றமாம்.

****************************

வெட்டியான வீட்டுக்குள்ள விடாதேன்னு சொன்னவரு
வெட்டியான் வீட்டுக்குள்ள வசமா மாட்டிகிட்டவரு.

****************************

கனி தரும் காலம்.. - பழைய எழுத்து - கவிதை (21)

எத்திணையும் அறியா சிந்தனைகள் எத்துனை?
சிந்தனை என்ன என் இணையா?
இல்லை நான் என்ன சிந்தனையின் பிணையா?
இத்துனைக்கும் யார் யார் துணை?

சித்திரை வந்தாலும் குளிர்கிறது?
நினைவுகளுக்கு நித்திரை கிடையாதா?
இல்லை நித்திரைக்கு நினைவில்லியா?
எனக்கு வரவில்லை?

விழித்திரையில் விதித்த கட்டுப்படுகளுக்கெல்லாம்
விதிவிலக்களித்து உள்ளே நுழைந்தவள் நீதானே?
விளக்கம் அளிக்காமல்
விளக்கணைத்து விட்டாய்.. யாரென்றறிவேன்?

என் சிந்தனையை சிறை தள்ளி
என்ன சாதிக்கப் போகிறாய்?

இனி வரும் காலம் கனி தருமா? அல்ல..
கனி தரும் காலம் இனி வருமா?

காலம் தரும் என நம்புகிறேன்
என் சுய நினைவுகளை.. சிந்தனைகளை.

வா வாழ்வோம் - பழைய எழுத்து - கவிதை (20)

பூக்கள் கொல்லுமோடீ வண்டுகளை?
பின் ஏனடி என்னை கொல்கிறாய்?

தென்றலைத் துரத்துமோடீ கடலலைகள்?
பின் ஏனடி என்னைத் துரத்துகிறாய்?

கடலலைகள் பாடம் கற்பிக்கும் கரைக்கு
நீ கூட அப்படித்தானோ?

பூவோடு வாசம் போல் வேண்டாம்
தென்றலோடு சுகம் போல் வேண்டாம்

கடலலைகளுக்கும் கரைக்கும் உள்ளது போல்
போதும் எனக்கு உன் உறவு.

நில்லாது நீ எனை நினைத்தால் போதும்
கரைந்தாலும் பரவாயில்லை.. கரைபோலிருப்பேன்.

கடலலைதான் நீ!
கரை நான்!
ஒவ்வொரு முறை என் நெஞ்சைத் தொடும் போதும்
கரைகின்றேன்
உன்னுள் தான்
ஆயினும் நிரந்தரமில்லை

காய்ந்து கிடக்கும் மணலாக்கிவிடாதே என்னை
உன் ஈரம் வேண்டும் எனக்குள்
அது ஆற்றும் என் காயங்களை

நீ ஆற்றும் செயல்கள் புரியவில்லை
பற்றும் அற்றதோ உன் நினைவு?
உன் நினைவற்றிருக்காது என் வாழ்வு.

வற்றாத ஊற்றடீ அது
சிற்றோடை சலசலக்கும்
செவ்வாடை கமகமக்கும்
புத்தாடை பூண்டிருக்கும்
அத்தோடு நின்றிருக்காது

கானம் பாடும்
வானம் ஏறும்
தினம் தினம் பிறக்கும் என் வாழ்வு
கனம் கனம் சுவைக்கும்
தரம் தரம் கேட்கும் இவ்வரம்
கிடைக்குமோடீ என் கையில்?

விதைத்து விட்டாயடீ
வதைபடும் நெஞ்சம்
சதையோ உனது?
சுதை போலாக்கி விடாதே என்னை.

சுவை வேண்டுமடீ.. வாழ்வில்
எவை வேண்டும் சொல் உனக்கு?
ஊண் தரட்டுமா? உயிர் தரட்டுமா?
பயிர் செய்த நீ.. காதல்
பயிர் செய்த நீதானடீ நீரூற்ற வேண்டும்

வா.. வாழ்வோம் இவ்வுலகம் வியக்க.

காதல் ஸ்நேகிதத்திற்கு.. - பழைய எழுத்து - கவிதை (19)

காதல் ஸ்நேகிதத்திற்கு,
நிறங்கள் நிஜமானது என்றே நம்புகிறேன்
நிஜங்கள் நிறம் மாறாது எனவும் நம்புகிறேன்.

என் தடம் தேடும் கண்களுக்கு
என் மனதில் ஓர் இடம் உண்டு என்றும்.

நீ அருகில் இருந்தும்
நின் அருகாமை இல்லாதது கடினம் தான்.

நீ எனை நினைக்கையில்..
நினை உணர்கிறேன்.
கனமும், எனை நீயும் உணர்வாய் என
என் நினைவு சொல்லும்.

இந்த இன்பத் திளைப்பு என்றென்றும் வேண்டும் எனக்கு
பொழுது புலர்கையில்
தூங்கி விழித்ததும் துணை தேடுகிறேன்
துயில் பாடவும் உனையே தேடுகிறேன்

பொழுது போகாதிருக்கையில்
உன் பொய்க்கோபம் தேடுகிறேன்

பொழுது சாய்கையில்
என் தூக்கம் தொலைத்தாலும்
நின் புன்சிரிப்பையே தேடுகிறேன்

புருவம் உயர்த்திப் பார்த்தாலும்
புதிர் பதில் சொல்லாது
அது போலவே நீயும்.

சகலமும் நீ.. அகிலமும் நீ - பழைய எழுத்து - கவிதை (18)

பால்நிலா பார்த்ததும்
பாவை நினைவு
இரவு களவு

சித்துவேலை செய்யும் உன்
சிலம்பொலி கேட்க வந்த என்னை
சிதறடித்து விடாதே

தேவன் தேடிவந்து
தீந்தமிழ்த் தேற்றுதல் சொன்னாலும்
திகட்டும் என தள்ளினேன்.

சிற்பி சிலகணம் தூங்கினாலும்
சிலை கண் விழியாது

காற்றைத் தேடச் சொல்லியும்
காணவில்லை என் களவுபட்ட நெஞ்சம் என்றேன்.. உண்மையா?

பூட்டி வைத்துப் பார்த்தேன் பலனில்லை
தட்டியபடியே இருந்தது

விடைதேடும் வாடல் நெஞ்சம்
உன் வாசல் வடம் பிடித்து நிற்க
நான் என்ன செய்ய இயலும்?

அது பொய் வேய்ந்தது என்பார் சிலர்
இது மெய்யா?

பொய்யொன்றிருக்க..
மெய்யொன்றிருக்கும்;
ஒப்புகிறேன்

உய்யும் உணர்வு சொல்வது பொய்யா?
பிறவும் பலவும் உலகம் சொல்லும்
அது மெய்யா?

இறைவனை பகைவனாக்கிக் கொண்டேன்
அடடா! இனியும் வகை தெரிய வரம் கேட்கலாகுமா?

பிறைநிலவாயினும்
முறைநிலவுதான்
முறையாகத்தானே வளரும்
தேவை.. பொறுமை

சிறைப்பட்ட நாளிலிருந்து
சிந்திக்கிறேன்
சற்றே விடுபட்டுப் பார்க்க

வானம்பாடி கானம் பாடினாலும்
வானம் வசப்படாது

காற்று காலம் முழுதும் தேடினாலும்
காவல் கிடையாது.

இரந்ததை
இறந்ததாக்கினால்?
பிறந்ததில் பயனொன்றும் இல்லை

பரந்ததில் நிரந்தரம் செய் உன்னை
பிறிதொரு வரம் வரும்
கரம் கோர்க்க

வள்ளுவனைக் கேட்டிருந்தாலும்
தெள்ளு தமிழில் இதைத்தான் சொல்லியிருப்பான்

தவறொன்றுமில்லை திருத்திக் கொள்ள
திருத்தம் கொள்க

ஆதவனாகிவிடு
ஆதியும் அந்தமுமாய் நீ
சகலமும் நீ
அகிலமும் நீ.

பெருமை வர பொறுக்கலாம் - பழைய எழுத்து - கவிதை (17)

கனவு கண்டேனடி
உன் நினைவு கொண்டேனடி

இரவு நித்தம்
நிலவு முத்தம்
உனை வேவு பார்க்க வந்ததா?
ஏதும் தந்ததா?

கானம் பாடும் காற்றும்
காதில் சொல்லும் சேதி

சிந்திக்க மறந்த என்
சிதைபட்ட நெஞ்சைக் கேட்டேன்
பதைபதைப்போடு
பூவும் பூவிற்குச் சிறகு முளைத்துப் பயன் தான் என்ன?

வெறுமை நெஞ்சம்
எறும்பையும் திண்ணும்

சிறுமை தேடி சிறகொடிவதை விட
பெருமை வர பொறுக்கலாம்

பெறுகையில் திண்ணம் நீ இருப்பாய்
பருகுகையில் பகிரலாம்
பாசத்தோடு
நேசத்தோடு.

விடியல் தேடும் எனக்கு விளக்கெதற்கு? - பழைய எழுத்து - கவிதை (16)

சில கவிதை உருமாறும்
சில கவிதை பரிமாறும்

என்னுள் என்ன?
உருமாற்றமா? பரிமாற்றமா?

புரியாத கவிதை புகழ் பாடுகிறேன் நான்.
புதிதாக ஆரம்பிக்கப் பட்டதா? இல்லை...?
முடியாமல் மொழியப்பட்டதா?

கவியழகின் கூறு சரி.
கவி மனதின் கரு?

வருநாட்கள் தருமா?
அதுவரை இது இருமா?

பலவாறு சிந்தித்தும் பயனில்லை
பலகூறு கேட்டும் கனிவில்லை.

என்ன இது?

சூரியன் நிலவாயிற்றா?
நினைவு கடலாயிற்றா?

அலைபாயும் நித்தம்
வலையிலும் சிக்காது வஞ்சம் செய்யும்
விளங்காது விளக்காது விடைதேடாது
அது எது?

ஓடும் நதியும்
பாடும் காற்றும்
நிலவும் நிலமும்
கேட்கும்.. ஏன் மெளனம்?

நிலவில் முகம் பார்க்க ஆசை
நதியை நாடி
நிலவைத் தேடி
முகம் பார்த்து
அகம் தேற்றி..

வானவில் தேடி வானத்தில் பாய்ந்ததில் பார்த்ததென்னவோ கருநிறம் தான்
கண் மூடினேன்.. தெரிந்ததென்னவோ அதேதான்.
அதனால்?

மாற்றமில்லை
ஒரு புதிய கூற்றுமில்லை

விடியல் தேடும் எனக்கு விளக்கெதற்கு?
அந்தி வரட்டும் சிந்திக்கலாம் அதைப்பற்றி

நான் விளக்கைப் பற்றிச் சொன்னேன்
விளக்கம் கேட்காதீர் விபரீதமாக.

சவமாயினும் சாகாதிருப்போம் - பழைய எழுத்து - கவிதை (15)

எரித்திடும் சூரியனும் எனைப் பார்த்து
சிரித்திடும் போது யார் என்ன செய்ய முடியும் என்னை?

சித்திரச் சிறகுகள்
சித்திரைப் பூக்கள்
பத்திரப் படுத்தினும் பயன் தாரா

வாடிடும் பூக்கள்
தேடிடும் போது வண்டுகள் வாரா

சூடிடும் போது
சுவைத்திட வேண்டும்..
சிறை வைத்திட்டால்.. சரிப்படாது.

அத்து மீறி நுழைந்து என் அறிவை அகழ்ந்தவள் நீ..
பத்து மாதம் சுமந்தவளையும் மறக்கச் செய்யும் அளவிற்கு உன்னிடம் என்ன?

சிந்தனைத் தீற்றல்கள் என்னுள் தூரிடும் போது
சிறை பட்ட வானவில் நீ.

எண்ணக் கீற்றுக்கள்.. உன் எண்ணக் கீற்றுக்கள் வேயப்பட்ட வீட்டில் வாழும் நான்..
திண்ணைக் காற்றாய் உன் வரவைப் பார்த்து..

சின்னக் கனவுகள் என்னுள் சிரித்திடும் போது
வண்ணக் கோலங்கள் போடும் புதிய வரவுகள்

ஒவ்வாது ஒன்று இருப்பினும்
ஒப்புக் கொள்வேன் உன்னிடம்

பொய்யே ஆயினும்
புகழ் பெறுவேன் உன்னிடம்

மருந்தினும் இனிய
உன் கோபம் தனிய
சாபம் தருவாய்.. காலம் முழுதும் என் காலடியில் நீ என.

பாவம் பார்த்திட்டு
பழி தீராமல்
பழியாய்க் கிடப்பேன் உன் காலடியில்

சாத்திரம் பேசும்
ஆத்திரம் கொள்ளும்
தரித்திரம் எனத் திட்டும் சமூகம்

சரித்திரம் எழுத நாம்
எண்ணித் துணிந்திட்ட பின்
யாரால் என்ன செய்ய இயலும்?
சவமாயினும் சாகாதிருப்போம்.
வண்ணத்துப்பூச்சி - இயற்கையின் அதிசயம் (Butterfly's life cycle)

சினூக் பாஸ் புகைப்படங்கள் (Chinook Pass Drive)

கடவுளாகிவிடு

காலத்தைப் பற்றி நிறைய முறை சிந்தித்திருக்கிறேன். ஆனால் காலம் யாருக்கும் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. காலம் மிக அடர்த்தியானது. தொடர்ச்சியானது. அது தன்னை யாரும் நெருங்க விடுவதே இல்லை. மிக ரகசியமாகவே இருக்கிறது. ஆனால் சுதந்திரமாக நாம் காலத்தினுள்ளே பயனிக்கிறோம். காலம் நமக்குள்ளே உறைகிறது. அது அமைதியாக இருப்பதாகவே தோற்றமளிக்கிறது. ஆரவாரமான இந்த உலகத்தில் அதன் சத்தம் நம் காதில் விழுவதில்லை. வீட்டில் யாருமில்லாமலிருக்கும் போது நிலவும் அமைதியில் கடிகாரச் சத்தமும், குழாயிலிருந்து சொட்டும் நீரும் நமக்கு பெரும் சத்தம் போடுவதாகத் தோன்றும். காலத்தின் சப்தம் எப்போதும் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை. நாம் வேறு சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு காலத்தை ஊமை என்று கருதிவிட்டோம். காலத்திற்கு ஆணவம் கிடையாது. தற்குறியாக என்றுமே இருந்ததில்லை. ஆனால் காலம் தான் இருப்பதாக உணர வைக்க முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம்தான் காது கேளாதவர்களாகி விட்டோம். காலத்தை உணர்ந்தால், நாம் கடவுளை உணர்ந்தவர்களாகி விடுவோம்.

காலத்தை யார் அளவிட்டது? யாருக்கு அவ்வளவு அதீத அறிவும் ஞானமும் இருக்கிறது? மனிதன் அதை நாட்களாகவும், மணித் துளிகளாகவும், அதனினும் சிறிய அளவாகவும் பிரித்து விட்டான். பிரித்து விட்டதால் காலம் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக நினைக்கிறான். அது ஒரு சிறு குழந்தையின் செயலைப் போன்றது. மனிதனுக்கு தான் அறிய முடியாத ஒன்று, அளவிட முடியாத ஒன்று, அல்லது தன் அறிவிற்கு எட்டாத ஒன்று இருக்குமாயின் அதை ஏதாவதொன்று கொண்டு பிரித்து விடுவான். பிரித்து விட்டால் அது அளவிட முடிந்ததாகிவிடும். இரவில் அண்ணார்ந்து வான்வெளியைப் பார்த்திருக்கிறீர்களா? அது காலையில் வெளிர்நீலக் கம்பளமாகவும், இரவில் இருட்டுப் பள்ளம் போலவும் தோற்றமளிக்கும். அதன் தொடக்கம் எங்கிருக்கிறது? முடிவுதான் எங்கே? தொடக்கமும் முடிவும் அறிய முடியாத ஒன்று. காலமும் வெளியும் இரட்டைக் குழந்தைகள். அவைகளுக்கு அளவீடுகள் அடங்காது. அவைதான் மற்றவற்றின் அளவுகளை நிர்ணயிக்கும். மனிதன் இரண்டையும் முழுவதுமாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். தவறொன்றுமில்லை. காலத்தையும், வெளியையும் கூறு போடலாம். ஆனால் ஒரு போதும் வென்று விட்டதாக மார்தட்டிக் கொள்ளக்கூடாது.

காலம் தன்னுள் பல ரகசியங்களை ஒளித்து வைத்துக்கொண்டே இருக்கிறது. உலகில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப் போகிற ஒவ்வொரு உயிரையும், மனித நாகரிகங்களையும், கலாச்சாரங்களையும், இயற்கை சீற்றங்களையும், போர்களையும் கண்காணித்துக் கொண்டே அமைதியாக தன்னுள் தேக்கி வைக்கிறது. மனிதனின் பார்வையால் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வரை மட்டுமே பயனிக்க முடியும். இந்த பிரபஞ்சத்தின் மூலங்களை அணு அளவு வரை ஆராய முடியும். ஆனால் அதன் மூலங்கள் அணுவுக்கு அணுவும், அவ்வணுவுக்கு அணுவும், அதனினும் அதனினும் சிறியது என்று சென்று கொண்டே இருக்கும். மனிதனின் அறிவுக்கு எட்டியது அணுவே. ஆதலால், மனிதனின் பார்வையில்தான் கோளாறு. மனிதன் தன்னால் இயலாத பட்சத்தில் அதுதான் இறுதியான உண்மை என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள காரணம் தேடுகிறான். ஆனால் இறுதியான உண்மை என்னவென்று காலம் மட்டுமே அறியும். காலம் அமரத்துவத்தின் அகராதி. காலமும் வெளியும் எப்போதுமே இருந்திருக்கிறது. பிரபஞ்சம் என்பது வெளியின் மறுவடிவம். ஒருவர் இறந்துவிட்டால் அவர் "காலமாகி" விட்டதாக சொல்கிறோம். அதுபோலத்தான் நாமும், மரங்களும், செடிகளும், விலங்குகளும் எல்லாமும். நாமும், காலமும், வெளியும், பிரபஞ்சமும் ஒன்றே என்ற உண்மை தெரிந்த நேரத்தில் நாம் கடவுளாகிவிடுவோம்.
கரைதேடும் நினைவுகள்

அப்போது எனக்கு ஆறேழு வயது இருக்கும். எந்தக் கவலைகளும் இல்லாமல் சுற்றித்திரிந்த காலம் அது. ஆனந்தத்தை நாம் தேடிப்போகாமல், ஆனந்தம் நமக்குள்ளே வாழும் காலம். இன்பத்தை தேடியும் நாடியும் போனதில்லை. கறைகள் படியாத மனதோடு கரைகள் அறியாத காட்டாறு போன்று அலைந்த சுகம் வேறு எப்போதும் வாராது. பல நாட்கள் பட்டாம்பூச்சியைப் பின் தொடர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறேன். காவிரியில் நானும் கரைந்து கெளுத்தி மீன்களோடு சம்பாஷனை செய்திருக்கிறேன். சாணி தெளித்த வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டே நிலவோடும் நட்சத்திரங்களோடும் தர்க்கவாதம் செய்திருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் பூத்திருக்கும் நந்தியாவட்டை செடிகளின் வாசனைப் பேச்சிலும் மலர்ந்த புன்னகயையும் ரசித்துக்கொண்டே வேப்பமர நிழலில் நின்று செஞ்சூரியனுக்கு வணக்கம் செலுத்தி என் நாளை ஆரம்பித்திருக்கிறேன். மாமரத்தில் ஏறி அதில் படர்ந்திருக்கும் களை பறித்துவிட்டு இறங்கும் போது, அது சொல்லும் நன்றிகளுக்கு, நமக்குள் இதெல்லாம் என்ன சம்பிரதாயம் என்று கூறி நட்பு பாராட்டியிருக்கிறேன். திண்பண்டங்களை ஒரு போதும் தனியாக உண்டது இல்லை. காக்கைகளும் அணில்களும் என் சமபந்தியில் உண்டு. என் பாட்டி கோலம் போட பத்து நிமிடம் தாமதமானாலும் அணில்கள் வந்து தேட ஆரம்பித்துவிடும். அணில்களுக்கும் எறும்புகளுக்கும்தான் முதலில் உணவு. எல்லாருக்கும் அதற்கு பிறகுதான். கோலம் போட்ட ஒரு மணி நேரத்தில் எங்கள் வீட்டு வாசலில் இன்னொரு நண்பர் வந்து விடுவார். அவரை நாய் என்று சொன்னால் என் பாட்டிக்கு கோபம் வந்து விடும். அவருக்கும் சாதம் படைத்துவிட்டு சமையலை தொடர்வாள் என் பாட்டி. அதற்குள் வீட்டின் உள்ளே வாழும் பூனைக்கு என் தாத்தா பால் பரிமாறிக் கொண்டிருப்பார். அடுப்பில் உளை கொதிக்கும் போதே கொல்லையில் சென்று சுள்ளி பொறுக்கிக் கொண்டு வந்து வெந்நீர் அடுப்பு பற்ற வைத்தாகிவிடும். எரிபொருளுக்காக மரங்களை வெட்டியதாக எனக்கு நினைவில்லை. தாத்தா குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகும் போது, மாட்டுக் கொட்டகையின் வாசலில் பூத்திருக்கும் செம்பருத்திகளை பறித்துக் கொண்டு செல்வார். தோட்டத்தில் இருந்து சற்றுமுன் பறித்த முளைக்கீரையையும், வெண்டைக்காய்களையும், கொத்தவரையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போவாள் என் பாட்டியின் சிநேகிதி. நீர் கலக்காத கறந்த பசும்பால் எனக்குப் பிடிக்கும் என்று தனியே கொண்டு வந்து கொடுப்பாள் தெரு கடைசியில் இருக்கும் என் அத்தை.

மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தீனியும் வைக்கோலும் வைப்பது என் வேலை. நான் வருவதைக் கண்டாலே கன்றுகள் துள்ள ஆரம்பித்துவிடும். அவர்களை அவிழ்த்துவிட்டு சுதந்திரமாக விளையாட விடுவேன். நானும் அவர்களோடு ஓடிப்பிடித்து விளையாடுவேன். கன்றுகள் தன் தாயோடு நின்று பசியாறும் போது பாசத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். தாய்ப்பசு என்னை நோக்கி, நீயுன் என் பிள்ளைதான் என்று சொல்வது போல சொல்லும். நான் கன்றுகளை அவிழ்த்து விட்டதற்காக பாட்டி திட்டுவாள். வீட்டில் மாடு இருக்கும் போதே வெளியில் பால் வாங்க வைக்கிறாயே என்று கடிந்து கொள்வாள். போனால் போகட்டும் பாட்டி, பாவம் என்று சொல்வேன். காளை மாடுகளுக்கு லாடம் அடிக்கும் போது அழுவேன். மாட்டுக்கு இது செய்யவில்லை என்றால் கால் வலிக்கும் என்று மாமா என்னை சமாதானப்படுத்துவார். வண்டி மாடுகளுக்கு கழுத்து வலிக்காதா என்று கேட்டு வில் வண்டியில் ஏற அடம் பிடிப்பேன்.

களத்து மேட்டிற்கு சென்று, விதை விதைத்துக் கொண்டிருக்கும் அக்காக்களையும், போரடித்துக் கொண்டிருக்கும் அண்ணன்களையும் சொந்தம் கொண்டாடி மதிய வெயிலில் எங்கள் வயலோரம் இருக்கும் மரத்தில் இருந்து இளநீரும் நொங்கும் சாப்பிட்டிருக்கிறேன். பனநொங்கு சாப்பிட்ட பிறகு அதன் காயை குச்சியின் முனைகளில் பொருத்தி அந்த வண்டியை ஊர் முழுக்க ஓட்டியிருக்கிறேன். தென்னந்தோப்புகளின் நிழலில் விழுந்து கிடக்கும் குறும்பைகளைப் பொறுக்கி வந்து ஈர்க்குச்சிகளில் பொருத்தி விளையாடுவேன். கொல்லையில் விழுந்து கிடக்கும் குச்சிகளைப் எடுத்து வளைத்து, தொங்கும் கொடிகளிலிருந்து நூல் பறித்துக் கட்டி வில்லும் அம்பும் செய்யும் வித்தையைக் கற்றிருந்தேன். சிவந்த கோவைப்பழங்கள் பறித்து ஆடுகளுக்குக் கொடுத்துவிட்டு என் சிலேட்டை அழிக்கவும் பயன்படுத்திய ஞாபகம். பூவரச இலைகளில் ஊதல் செய்து இசை பயின்று ராகங்கள் பாட முயற்ச்சித்திருக்கிறேன். தென்னங்கீற்றுகளில் பாம்பு செய்து என் சகோதரிகளை பயமுறுத்துவேன். வீட்டு முற்றத்தில் தரை உடைந்து இருக்கும் சிறு பகுதியில் தெரியும் மண்ணில் நெல் விதைத்து கொட்டாங்கச்சிகளால் நீர்ப்பாசனம் செய்து விவசாயம் செய்திருக்கிறேன். களிமண்ணால் கோவில் கட்டி சாமி செய்து கருவக்காட்டிற்கு அருகில் இருக்கும் வாசனை மரமல்லிகளைப் பறித்து வந்து அர்ச்சனை செய்திருக்கிறேன். எனக்கு இன்றும் நினைவிக்கு வருகிறது.

ஊரில் திருவிழா என்றால் கூத்தும் கும்மாளமும் கொண்டாட்டமுமாகி விடும். நண்பர்கள் எல்லாரும் வருவார்கள். உறவினர் யாரும் வராமல் இருக்க மாட்டார்கள். கோவிலில் சாமி புறப்பாட்டின் போது நாகஸ்வரக் கலைஞர்களை மல்லாரி வாசிக்கச் சொல்லி அந்த இசைக்கு ஏற்ப மெதுவாக ஆடுவோம். சாமி அலங்கரிக்க, பூப்பறிக்க ஒரு படையாக செல்வோம். சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் ஆச்சரியப்படும் வகையில் பந்தியில் பரிமாறுவோம். அதில் பாராட்டுக்களுக்காக மட்டுமின்றி பரிமாறும் போது பெறும் அன்புக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் செய்வோம். அந்த மகிழ்ச்சி சாப்பிடும் போது பெறுவதைவிட பெரியது, சித்திரையில் முதன் முதலாக வயலை உழும் போது என்னை பூசை செய்யச் சொல்வார்கள். அது ராசிக்காகவா இல்லை குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாலா என்று தெரியாது. அந்த நேரங்களில் எனக்குக் கிடைக்கும் பெருமை மிகவும் பிடிக்கும். மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னமே யோசிக்க ஆரம்பித்து விடுவோம். ஊரில் இருக்கும் கன்றுகள் யாவும் சிறுவர்களின் கைவண்ணத்தில் அலங்கரிக்கப்படும். கன்றுகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டே மறுகையால் கன்றின் கழுத்தில் கட்டியிருக்கும் மணிகளை அடித்துக் கொண்டே செல்வோம். கடைசியில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு, கண்றுகளுக்கு பூசை செய்வோம். நவராத்திரி நாட்களில் கூட்டமாக சிறுவர்கள் ஒன்று சேர்ந்து எல்லா வீட்டு வாசலுக்கும் சென்று "நவராத்திரி கொலு கொலு சுண்டல்" என்று ஒரே குரலில் பாடி சுண்டல் வாங்கி உண்போம்.

இங்கு பதிவும் செய்யப்பட்டவை காலப்பெருவெளியில் ஒரு துகளுக்கும் குறைவே. இன்னும் நிறைய நிறைய நினைவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இன்றைய காலகட்டம் முற்றிலும் வேறு. பசுக்களோடும், மரங்களோடும் அன்பு செய்தவன், "நான்" என்னும் தனிச்சிறையில் என்னை நானே அடைத்துக் கொண்டுவிட்டேன். மனதில் ஏகப்பட்ட குறைகளோடும் அழுத்தத்தோடும் அலைந்து கொண்டிருக்கிறேன். காலவெள்ளம் என்னை எங்கோ அடித்துக் கொண்டு வந்துவிட்டது, இந்த நினைவுகளை நினைக்கையில் எல்லாம் என் மனதில் அந்த நந்தியாவட்டை வாசமும், பூவரச இலை ஊதலின் இசையும் என் மனதை வருடும். என்னையும் அறியாமல் கண்ணோரம் நீர் கசியும். நான் ஏங்குவதை விடவும், ஊரில் நான் விட்டு வந்த வேப்ப மரமும், ஆற்றங்கரையும் ஏங்கும் என்று தெரியும். நான் பயனித்த அதே சுவடுகள் மீண்டும் என் காலடிக்காக காத்துக் கிடக்கும் என்றே நான் நம்புகிறேன். நாகரிகப் போர்வையில் என்னை நானே தொலைத்துவிட்டதாகவே நினைக்கிறேன். என் நினைவுகள் யாவும் அவற்றை மறுக்கின்றன. மீண்டும் ஒரு நாள் அதே சுகம் வருமென்று காத்திருக்கிறேன்.
காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!

ராஜா சர்.முத்தையா செட்டியார் தன் அறுபதாம் வயது நிறைவு விழாவை 1941ல் கொண்டாடினார். பிராமணர்கள் 60 பேருக்கு 60 மாடு, 60 வீடு, 60 வேட்டி, துண்டு தானம் கொடுத்தார். பிராமணர் அல்லாதாரின் நலம் காக்கும், "ஜஸ்டிஸ் கட்சி'யைச் சேர்ந்தவர் ராஜா முத்தையா செட்டியார். இவர் இப்படி பிராமணர்களுக்கு தானம் கொடுத்தது, மூட நம்பிக்கை என்றும், சமூக விடுதலைக்கு எதிரான செயல் என்றும் காரசாரமாக ஒரு தலையங்கம் எழுதினார் அண்ணாதுரை.

அதை ஈ.வெ.ரா.,வின், "விடுதலை' பத்திரிகையில் வெளியிட முனைந்தார். ஈ.வெ.ரா., வும், "கட்டாயம், எழுத வேண்டும்; விடாதே!' என்றார். காரணம், பிராமணர்களுக்கு தானம் கொடுத்த முத்தையா செட்டியார், தன், "விடுதலை' பத்திரிகை வளர்ச்சிக்கு பணம் தரவில்லையே என்ற கோபம். அண்ணாதுரை எழுதிய தலையங்கம் அச்சு கோர்க்கப்பட்டு, அச்சு எந்திரத்திலும் ஏறி விட்டது. அப்போது பார்த்து, முத்தையா செட்டியாரிடமிருந்து அறுபதாம் ஆண்டு நிறைவு விழா பரிசாக ஈ.வெ.ரா.,வுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, "செக்' வந்து விட்டது. உடனே அண்ணாதுரையை அழைத்து, "அந்த தலையங்கத்தை அச்சிடாதே!' என்றார் ஈ.வெ.ரா., அண்ணாதுரை சம்மதிக்கவில்லை; "எழுதியது எழுதியதுதான்!' என்றார்.

"சரி; சரி; அதே கருத்தை நானே தலையங்கமாக எழுதி விடுகிறேன்...' என்று கூறி, உப்புச்சப்பு இல்லாமல், வழ, வழ... கொழ, கொழ என்று ஒரு தலையங்கத்தை எழுதி வெளியிட்டார் ஈ.வெ.ரா., காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!


நன்றி: தினமலர்-வாரமலர்
நிரபராதி

துக்கம் தொண்டை அடைக்கறது. எவ்வளவு சமாதானம் சொல்லியும் என்னால் ஏத்துக்க முடியலை. ரெண்டு வருஷமா ஒழச்சு இருக்கேன். சாப்பாடு தூக்கம்னு பாத்ததில்ல. சினிமாவே கெடயாது. க்ரிக்கெட்டு கூட இல்ல. இவ்ளோ ஒழச்சும் பலனில்லயேன்னுதான் வருத்தமா இருக்கு. நான் செய்யாத பாவத்துக்கு ஏன் தண்டனை? இதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? இந்த நேரம் பாத்து டிவில அழுகை நாடகம் ஓடிண்டு இருக்கு. எனக்கு மேல யாரோ அழுதுண்டே இருக்கா. அம்மா கீரை நறுக்கிண்டே அவாள வாய்க்கு வந்தபடி திட்டிண்டு இருக்கா. சித்தப்பா ஸாயங்கால ஸந்தியாவந்தனம் பண்றா. அக்கா இப்போதான் துர்க்கைக்கு வெளக்கு போட போயிருக்கா. பாட்டி ரேழிலேந்து கொரல் குடுக்கறா. இதுக்கு நீ என்னடா கண்ணா பண்ணுவ. நீ செய்ய வேண்டியத எல்லாம் சரியா செஞ்சுட்ட. அதுக்கப்பறம் எல்லாம் பகவான் செயல். க்ருஷ்ண பரமாத்மா கீதைல என்ன சொல்லிருக்கார்? கடமையை செய்; பலனை எதிர்பாராதேன்னுன்னா சொல்லிருக்கார். அதுனால நீ கவலப்படாத. இவ்ளோ சொல்லியும் என்னால ஜீரணிக்க முடியல. அழுதுண்டே அடுத்தது என்ன நடக்கும்னு யோசிக்கறேன். அப்பா இன்னும் வரலை. வந்தா என்ன சொல்வாளோன்னுதான் பயமா இருக்கு. அப்பா எப்போதுமே என்னத்தான் கொற சொல்லுவா. என்னோட தப்பு இல்லேன்னா கூட. புள்ள கொழந்தேள அப்டிதான் வளக்கனுமாம். இல்லேன்னா கெட்டுப்போயிடுவாளாம். என்ன கணக்கோ, பகவானுக்குத்தான் வெளிச்சம். எப்பப் பாத்தாலும் படி படின்னு சொல்லிண்டே இருப்பார். ஆகாரம் ஆச்சான்னு கூட கேக்க தோணாதோ? அடுத்தாத்து கொழந்தேள பாரு எப்டி படிக்கறான்னு நீயுந்தான் இருக்கியே ஒன்னுக்கு யோக்யதை இல்லன்னு எதாச்சும் பாட்டு விழுந்துண்டே இருக்கும். எனக்கு யாரையாச்சும் கம்பேர் பண்ணி பேசினாலே பிடிக்காது. ஆனா அதுதான் எப்போதும். சரி என்ன பண்றது. இன்னிக்கு எல்லாம் சேந்துண்டு வரப் போறது. ஒரே அழுகை அழுகையா வர்றது. என்னோட தப்பே இல்லியே. இழப்பு என்னமோ என்னோடது. இதுல இவா வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சற மாதிரி. பகவானே!

பாட்டிக்கு இதெல்லாம் தெரியாம திருப்பியும் சமாதானம் சொல்றா. இப்போ என்ன ஆயிடுத்துன்னு கன்னத்துல கை வெச்சுண்டு இருக்க? அது என்னமோ கம்பியூட்டருக்கு படிச்சா என்ன கொறஞ்சா போறது? எதோ படிச்சோமா போணோமான்னு இல்லாம. அழுதுண்டு கண்ண கசக்கிண்டு பொம்மணாட்டி கொழந்தையாட்டம். போடா போ. கோயிலுக்கு போயிட்டு வா கோவிலுக்கு போயிட்டு வந்தா எல்லாம் சரியா போயிடும்னு பாட்டி சொல்லிண்டு இருக்கும் போதே அப்பா வந்துட்டார். கண்ணத்துலயே ரெண்டு உட்டார். நா என்னோட தப்பு இல்லியேப்பான்னு சொல்றத மீறி அடிக்கறார். நீ இன்னும் ரெண்டு மார்க்கு கூட எடுத்து இருந்தா உனக்கு கெடச்சு இருக்கும். எங்க நம்ம சொல்றத கேட்டாதான. தானா எதாச்சும் பன்றது. போ போ என்னமோ பன்னு. எல்லாம் உன் நல்லதுக்குதான் சொன்னேன் கேட்டாதான. சொல்லிண்டே இருக்கும் போது அடிக்க வற்ரார். அம்மாவும் பாட்டியும் வந்து தடுக்க அவாளுக்கும் திட்டு விழறது. நல்ல வேளையா ரவி மாமா வந்துட்டார். அப்பாடா இப்போதக்கி அடியிலேந்து தப்பிச்சோம். தெரு கோவில் திருநாள் பத்திரிக்கை ப்ரூஃப் எடுத்துண்டு வந்துர்க்கார் போலருக்கு. ரவி மாமாக்கு நெலம புரியாம என்னடா அம்பி +2ல 1100க்கு மேல வாங்கி ஜமாய்ச்சுட்ட போலருக்கே. எனக்கு தெரிஞ்சவா எல்லாரும் ரொம்ப கம்மியாதான் வாங்கிருக்கா. என்னமோ கணக்கு பரிட்சை கூட ரொம்ப கஷ்டமா இருந்துதாமே. நீ புத்திசாலிடா கொழந்தே. நன்னா இருன்னு சொல்லின்டே அப்பாகிட்ட பேச போனார். பத்திரிக்கைல ஒரே ஒரு திருத்தம் சொன்னார் அப்பா. திரு. மணி அப்டின்னு அடிச்சு இருக்கறத "மணி அய்யர்" ன்னு அடிக்கனுமாம். 'பளார்'னு அடிக்கனும் போல இருந்துது. பகவானே! இது என்னோட தப்பே இல்லியே. என்ன ஏன் தண்டிக்கற? திரும்பவும் அதே யோஜனை. எனக்கே தெரியாமல் மீண்டும் அழ ஆரம்பித்தேன்.

************************************************************************************

இது என்னுடைய முதல் முயற்சி.
இனி தேவை முறையான பயிற்சி.


மீண்டும் சந்திப்போம்.
ரஜினிகாந்த்: இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

ஒரு முறை, இரு முறை அல்ல; மற்றுமொரு முறை என்று செல்கிறது ரஜினியின் அரசியல் ப்ரவேச அறிவிப்பு கணக்கு. மீண்டும் ஒரு முறை ரஜினியின் அரசியல் ப்ரவேசம் குறித்து செய்திகள் வெளியாகி, அதற்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து மறுப்பு வெளியிட்டு இருக்கிறார். இது அவரது சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக இருந்தாலும், கொஞ்சமாவது தமிழக மக்களை மனதில் கொள்ள வேண்டாமா? என்ன கொடும சார் இது? நீங்கள் நீங்கள் மட்டுமாக இருக்கும் வரையில் தொந்தரவு இல்லை. தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள். சினிமாவில் உங்கள் முட்டாள்தனமான வசனங்களை ரசித்த குற்றத்திற்கான தண்டனையா இது? "நா ஒரு தடவா சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி". யோவ், ஒரு தடவ சொல்லும் போது ஒரு தடவதான் சொன்னா மாதிரிதான். தண்ணி அடிச்சு இருந்தீங்களா என்ன? எப்டி நூறு தடவ சொன்னா மாதிரி இருக்கும். உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? இல்ல சைடிஷ்ஷா? இந்த வடிகட்டின பைத்தியக்காரத்தனத்த சினிமாவோட நிறுத்திகிட்டா போதாதா? எதுக்கு பொதுவாழ்க்கையிலயும்? தமிழக மக்கள் ஏற்கனவே ரொம்ப நொந்து போயாச்சு. இதுல இவரோட அலம்பல் வேற.

இவர் ரசிகர்களை சந்திக்க போகிறார்; சந்தித்து அரசியல் ப்ரவேசம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போகிறார் என்ற செய்தி மூன்று வாரங்களுக்கு முன்பே வட்டமடிக்கத் துவங்கியாயிற்று. மூன்று வாரங்கள் மெளனம் காத்துவிட்டு இப்போது அறிக்கை வெளியிட்டு இருப்பது ஒரு குழப்பவாதியின் தெளிந்த ஏமாற்று வேலை. இவருக்கு உண்மையாகவே அரசியல் ஆசை இல்லேன்னா இந்த செய்தி வந்த உடனேயே மறுப்பு வெளியிட்டு இருக்கனும். மூனு வாரமா என்ன சார் செய்துகிட்டு இருந்தீங்க? இமயமலை போயி கபிலமுனி கிட்ட ஆசிர்வாதம் கேட்டீங்களா? அவர் உங்ளுக்கே அல்வா குடுத்துட்டாரா? அது பரவாயில்ல. இப்போ வெளியிட்ட மறுப்பு செய்தியில் கூட தன்னுடைய சாமர்த்தியமான பைத்தியக்காரத்தனத்தோட சினிமாவையும் கலந்துதான வெளியிட்டு இருக்காரு. "இவரு வந்தா யாராலயும் தடுக்க முடியாதான்" எந்த நம்பிக்கையில இவரு இப்டி சொல்லலாம்? எல்லாம் நம்ம மக்க மேல இருக்கற அசட்டு நம்பிக்கதான். தமிழக மக்கள் இப்போவாவது முழிச்சுக்கனும். இனிமே ரஜினிகாந்த் பத்தி அரசியல் செய்தி வந்தா புறக்கணிக்கனும். அவர் அரசியலுக்கு நெசமாவே வந்தா அவரையே புறக்கணிக்கனும். இந்த சமயத்துல ஜெயகாந்தனுடைய "நடிகர்களின் சமுதாய பங்கு" பற்றிய கட்டுரைய பதிவு செய்தா ரொம்ப நல்லா இருக்கும். தேடிப் பார்க்கிறேன். இருந்தா பதிவு செய்யறேன்.

குசேலனில் இவர் உண்மையை சொல்லி இருக்கிறாராம். "இதற்கு முன் திரைப்படங்களில் பேசிய வசனமெல்லாம் ஒரு வசனகர்த்தாவோ இயக்குனரோ எழுதி கொடுத்து பேசினாராம்". ஏன் சார் அந்த மாதிரி வசனம் எழுதும் போது உங்க புத்தி எங்க போச்சு? உங்களுக்கு தமிழ் தெரியாதா? அப்போ தமிழ் மக்கள வெச்சு சம்பாதிக்கறத்துக்காக என்ன வேனா பேசுவீங்க. சுயபுத்தி இல்லாம காசு பாத்தா போதும் உங்களுக்கு. ஒரு பரபரப்ப உண்டாக்கனுன்னா பொது மேடையில "அவங்கள ஒதச்சா என்னன்னு" பேசுவீங்க. யாரு கண்டா? அது கூட யாராச்சும் எழுதி கொடுத்து பேசினேன்னு சொல்லி சுலபமா தப்பிக்கலாம். இந்த அறிக்கையும் ஒரு வேளை யாராச்சும் எழுதி கொடுத்துதான் வெளியிட்டு இருக்கிறாரோ என்னமோ? அடுத்த படம் "இயந்திரன்" வர்ற வரைக்கும் பொறுக்கனும். ஏன்னா இதுக்கான விளக்கம் அதுல தான் வரும். அப்புறம் அதுக்கு அடுத்த படத்துல "முன்னாடி படத்துல பேசினது ஒரு ரோபோ. அதுக்கு சொந்த புத்தி கிடையாது. அதுனால அத நம்பாதீங்க".. அப்டின்னு சொல்லுவார். என்ன ஒரே தில்லாலங்கடியா இருக்கு.

கடைசியா ஒரு வரி. ரஜினிகாந்த் பாணியில் சொல்ல வேண்டுமானால்:

இன்னும் தமிழ் மக்கள் இந்த நடிகரை நம்பினால், "தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது".
Kalpathy Bhajanotsavam 2008: கல்பாத்தி பஜனோத்ஸவம்

நான் திரு. உடையாளூர் கல்யானராமன் (Sri Udayalur Kalyanaraman) மற்றும் அவருடைய மிருதங்க வித்வான் திரு. பாபு ராஜசேகரன் (Sri Babu Rajasekaran) அவர்களின் ரசிகன். சில நிகழ்ச்சிகள் உங்கள் விருப்பப்படி எதிர்பாராதவிதமாக நடக்கும். அது போன்றது தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. தொடர்வது, பஜனோத்ஸவ புகைப்படங்கள்.











இளமையில் காதல் - பழைய எழுத்து - கவிதை (14)

பழைய எழுத்து

இளமையில் காதல்

பேதை மனம் போதையில் ஏதேதோ உளரும்
பருவம் பறந்து சென்று பால்நிலா மீதமரும்
நினைவு நீரில் நடக்கும்
கனமும் கனவு கதை சொல்லும்
எண்ணம் எங்கெங்கோ சிதறும்
அந்தி பகல் பாராது அடம்பிடிக்கும் நெஞ்சம்

பூமி ஆழம் பார்க்கத் தோன்றும்
வானம் தொட்டுப் பார்க்கத் தூண்டும்
சலனம் சித்து வேலை செய்தாலும்
புத்தி புகழ்பாடும் அதை

பார்வை பாதியாய் போக
புது வழி தேடும் விழி
அறிவு அகழ்ந்தாலும் வாராது
துணிவு மட்டும் எங்கிருந்தோ வந்திடும்

தனிமை சுகம் தரும்
தட்டுப்படுவன எல்லாம் தலைகீழாய்

கேள்விகளுக்கெல்லாம் கேள்விகளாகவே பதில்
மனம் ஆடும் பாடும்
அறிவுரை மட்டும் அடங்காது அதில்
குழப்பம் குடை பிடிக்கும் எல்லாவற்றிலும்
உங்களுக்குமா என்ன?

இதெல்லாம் மதுவால் அன்று
மது மிஞ்சும் மாதுவால்.
லாலூ....காமடி

"நேரு காலத்து நினைவுகள்"

எம்.ஓ.மத்தாய். இவர் ஒரு மலையாளி. மறைந்த பிரதமர் நேருவின் நேரடி உதவியாளர். நேருவின் மறைவிற்கு பல ஆண்டுகளுக்குப் பின், "நேரு காலத்து நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதி பரபரப்பு ஏற்படுத்தியவர். நேருவின் அந்தரங்கங்களை அறிந்தவர் இவர் என்பதால், இந்தப் புத்தகம் வெகு வேகமாக விற்பனையாகித் தீர்ந்தது.


அப்புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி: நேரு 1947ல் குளிர் காலத்தில் லக்னோவுக்கு வருவதாக இருந்தார். சரோஜினி நாயுடு, அப்போது உ.பி., ஆளுனராக இருந்தார். பத்மஜாவை நேரு திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு வதந்தியை பரப்பினார். பத்மஜாவும் மிக பரபரப்போடு இருந்தார். ஆனால், லேடி மவுண்ட் பேட்டனுடன், நேரு வந்து சேர்ந்ததும், சீறினார் பத்மஜா. உடனே, அவர் நேருவின் வீட்டிற்கு வந்து, பக்கத்து அறையில் தங்க ஆரம்பித்தார்.


"இவர் இப்படியே நிரந்தரமாக தங்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?' என்கிற நிலைமை ஏற்பட்ட போது, "கிழக்கிந்திய நாடுகளுக்கு சுற்றுலா போகும் வழியில் நேரு வீட்டில் தங்குவார் மவுண்ட் பேட்டனின் மனைவி...' என்று பத்மஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே கோபித்துக் கொண்டு வெளியில் போய் தங்கினார் பத்மஜா. இந்திராவைக் கூப்பிட்டனுப்பி, தனக்கு நேரு எழுதிய கடிதங்களை எல்லாம், தான் திருப்பிக் கொடுக்க விரும்புவதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னார் பத்மஜா!
உடனே, என்னிடம் வந்து இந்த விஷயத்தைச் சொன்னார் இந்திரா. நான் சிரித்தேன்!
ஒரு வருடம் சென்றதும், நேருவின் படுக்கை அறையில் லேடி மவுண்ட் பேட்டனின் இரண்டு புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து தன் படம் ஒன்றையும் நேரு பார்க்கும்படியாக மாட்டி வைத்தார் பத்மஜா; ஆனால், அதை அப்புறப்படுத்தி விட்டார் நேரு.


காசியிலிருந்து 1948ல் டில்லி வந்தார் ஷாரதா மாதா என்ற பெண் சந்நியாசி. அவருக்கு பேட்டியளித்தார் நேரு. ரொம்ப அழகாக, இளம் வயதில் இருந்தாள் சந்நியாசி. அதன் பிறகு அவள் அடிக்கடி நேருவைப் பார்க்க வந்து போய் கொண்டிருந்தாள்.
ஒருநாள் திடீரென்று மறைந்து விட்டார் ஷாரதா மாதா. 1949 நவம்பரில் பெங்களூரில் இருந்து கன்னி மடத்தினர், ஒரு கட்டுக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் கொடுத்தனுப்பினர்.
வட மாநிலத்திலிருந்து தங்கள் கன்னி மடத்திற்கு ஒரு பெண் வந்தாள் என்றும், அவள் ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள் என்றும், தான் யார் என்று சொல்ல மறுத்து விட்டாள் என்றும், குழந்தையையும், இந்தக் கடிதக் கட்டையும் அங்கு விட்டு விட்டு, எங்கோ போய் விட்டார் என்றும், இந்தியில் எழுதப்பட்ட கடிதங்கள் பிரதம மந்திரியால் எழுதப்பட்டவை என்று அறிந்து, அனுப்பியுள்ளதாகவும், கன்னி மடத் தலைவி (வெளிநாட்டு மாது) வந்தவரிடம் குறிப்பு அனுப்பி இருந்தார்.


இந்த விஷயங்கள் நேருவுக்குச் சொல்லப்பட்டன. அவர் கடிதங்களை வாங்கிக் கிழித்தெறிந்தார். சுபாஷ் சந்திரபோஸைப் பற்றிய ஒரு சம்பவம் இப்போது என் ஞாபகத்துக்கு வருகிறது. போசுடன் கூட இருந்த ஏ.ஸி.என்.நம்பியார் என்னிடம் சொன்னார் : ஜெர்மனியில், போசுடன் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு ஆஸ்திரியப் பெண், போஸ் மூலம் கருவுறவே, கருச்சிதைவு செய்ய வேண்டும் என்று நினைத்தார் போஸ். ஆனால், அவள் கருவுற்று பல மாதங்களாகி விட்டபடியால் கருச்சிதைவு ஆபத்தெனக் கருதப்பட்டது. அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் போசுக்கு விருப்பமில்லை. சீக்கிரமே, ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் ஜெர்மனியை விட்டு ஜப்பான் சென்று விட்டார் போஸ்.


இந்தியாவை விட்டு லேடி மவுண்ட்பேட்டன் போன பிறகும், நேருவுக்கு கடிதங்கள் எழுதுவார். "அவருக்கு' என்று போடப்பட்டு வரும் அந்தக் கடிதத்தை மட்டும் பிரிக்க எங்களுக்கு உரிமை கிடையாது. அதை நேருவே நேரடியாக பிரித்து படிப்பார்.


—பெரிய இடத்து சமாச்சாரங்கள் இப்படித்தான் இருக்கும் போலும்!

Thanks: Dinamalar Varamalar

அயல்நாட்டு வாசம் - கவிதை (13)

எதுகையும் மோனையும்
என்னோட வெளையாடி
எத்தனையோ நாளாச்சு
எழுதி ரொம்ப நாளாச்சு

என்னத்த எழுத?
எப்படித்தான் எழுத?

காலையில எழுந்தோன்ன காப்பி
கலந்து கொடுத்த என் தாயி
விட்டுட்டு வந்தேனே
வெவரமில்லா பயபுள்ள

அயல்நாட்டுக்கு வந்தேனே
அத்தனையும் தொலச்சேனே
எப்படித்தான் பாத்தாலும்
என் கணக்கு நட்டம்தான்

அப்பனாத்தா விட்டுட்டு
சேக்க வந்தேன்
அமெரிக்க டாலரு
என் மனசெல்லாம் சகதி சேறு

அக்கா புள்ள பொறந்து
ஈறாறு மாசமாச்சு
ஒரேயொரு மொற கூட
உச்சி மொகர குடுத்து வெக்கல எனக்கு

எண்ண (எண்ணெய்) இருந்தா போதும்
எவனோட வீட்டுக்குள்ளயும்
எமானா போறான் இந்த நாட்டுக்காரன்
எமனோட வீட்டுக்குள்ள நா இருக்கேன்

காதல் தோல்வியில
கவிதயெல்லாம் எழுதியிருக்கேன்
அதவிட சோகமடா
அயல்நாட்டு வாசம்

என்னிக்குத்தான் திரும்புவேனோ?
பண எண்ணிக்கைக்கு அப்புறம்தான்
அந்த எண்ணம் கூட

பணம் சேர்க்கும் பாதயில
மனசு சொல்றத மதிக்க முடியல
அட, ஆனாலும் எதயும் மறக்க முடியல

எவ்வளவோ பணம் சேத்த பின்னயுங்கூட
இவ்வளவும் பத்தாது
இன்னும் கொஞ்ச நாள்
இருந்தா எதுவும் தப்பாது

இப்படியே யோசிச்சு
இதெல்லாம் சரியில்ல
இப்போதே போகலாம்னு

நான் நெனச்சாலும்
கடங்காரன் கூட என் சட்டய புடிச்சதில்ல
என்னோட சட்டைப்பை என் சட்டைய புடிக்கும்

வசதியா வாழும் போது
வழக்கு என்னடான்னு கேக்கும்
மதி போனா பரவாயில்ல
தாய் மடி போனாலும் பரவாயில்ல

சமாதானமா சொல்லும்
எம்மனச டாலரு வெல பேசும்

நான் நானா வாழ்ந்து
ரொம்ப நாளாச்சோ?
நகமும் சதையும் கூட
பணமா போச்சோ?

இப்போதைக்கு அலுவலகத்துக்கு நேரமாச்சு. இன்னும் நெறய கத இருக்கு. வந்து சொல்றேன் என் வழக்கையெல்லாம்.

உண்மை சொல்ல.. - பழைய எழுத்து - கவிதை (12)

நின் பாதம் நிழல்பட நான்
நித்தம் வேதம் போல் உன் பெயர்
நிலவு நிறம் காய
நிஜமாய் உன் பக்கத்தில் நான்.

உன் விரல் போடும் கோலம்
கலைய என் கனவு.

பூவாசம் என் சுவாசம் தொட
உன் சுவாசம் என் நெஞ்சைத்தொட
காதல் பூகம்பம்
அரங்கேற்றம்.

இரவு தொலைந்து இன்பராகம் பாட
இன்னமும் இன்னமும்... இன்னமும்
இரவு நாட

விட்டம் பார்த்து
விளங்காக் கதை பேசி
விடுகதையென்று கவிபாடி
பொய் பல புனைந்து
வராத வண்ணம் தீட்டி விளையாடி
என்ன இன்பம்! என்ன இன்பம்!

புரியாத புதிரொன்று
நகையாடி நிற்க
அதற்கு விடை சொல்ல விழைந்து

நின் கண் பார்த்து கண் பறித்து
கரம் பிடித்து நிழல் அணைத்து
உயிர் தேடி உள்ளம் வருடி

உண்மை சொல்ல உளம் உளறி
காதல் என்றேன்
அடியே...காதலென்றேன்

சுவை கொண்ட சுகம் சார்ந்து
அவை சேர்ந்ததேதும் இல்லையடி
இது அகம் வார்த்த அன்புக்காதலடி!

இது நான் எழுதி நான் ரசித்தவையில் ஒன்று. நான் இன்னும் கவிதை எழுதுவதற்கு காரணம் நானே என் ரசிகனாக இருப்பதால்தான்.
பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகள்

பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகள் பற்றிய செய்திகள் சமீபத்தில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. சினிமா நடிகைகளின் உடைகள் பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய காவலர் போர்வையில் இருக்கும் பெரிய மனிதர்களாகிய விமர்சகர்கள் விமர்சிப்பதும், அதற்கு நடிகைகள் மன்னிப்பு கேட்பதும் கிட்டத்தட்ட புளித்த செய்தியாகி விட்டது. சமீபத்தில் லீனா மணிமேகலை என்ற பெண் எழுத்தாளர்/சிந்தனையாளர் ஒரு நிகழ்சிக்காக அழைக்கப்பட்டிருந்த போது சென்னை லயோலா கல்லூரியில் துப்பட்டா அணியாமல் வந்ததற்காக அனுமதிக்கப்படாதது பற்றிய விவாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதில் அவர் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று ஆண்கள் தீர்மானிக்கிறார்கள் மற்றும் இந்த சுதந்திரம் கூட பெண்களுக்கு இல்லையெனில், வேறு எதில் சுதந்திரம் இருக்க முடியும் என்று கேட்கிறார். ரொம்ப நியாயமான கேள்விதான்.

அவர் துப்பட்டா அணியாமல் வந்ததற்காக அனுமதிக்கப்படாதது வருந்தத்தக்கதாயினும், அவரைப் போன்ற அறிவாளர் நாம் என்கு செல்கிறோம் அங்கு என்ன கோட்பாடுகள் (கட்டுப்பாடுகள்) என்பது பற்றி சிந்தித்திருக்க வேண்டும். அதோடு, ஒரு நிறுவனத்திற்கு செல்லும் போது அந்நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதுதான் ஒரு பண்பாளர் செய்யக்கூடிய கண்ணியமான செயலாகும். அதை விடுத்து இவர் பெண்ணியம் பேசுவதும் பெண் சுதந்திரம் பேசுவதும் சரியல்ல. இது அவருடைய சுயஆணவத்தை (ஈகோ) அந்த கல்லூரி நிர்வாகத்தினர் காயப்படுத்தியதற்கான வெளிப்பாட்டின் முகமூடியாகப் பயன்படுத்துகிறார்.

தமிழகத்தில் நடிகைகள் பற்றிய சர்ச்சைகளில் அரசியல்வாதிகள் மற்றும் பலர் விமர்சிப்பது ஒரு பச்சை மொள்ளமாரித்தனம். அதே நடிகைகள் திரைப்படத்தில் அவர்களுடைய அங்கங்கள் தெரிய உடையணிந்தும் ஆபாசமான அசைவுகளும் கொண்டிருப்பதில் தவறில்லையோ? ஒருவேளை திரையரங்க இருட்டில் இவர் தமிழர் என்பது மறந்து போகின்றதோ என்னவோ? தமிழக நடிகைகள் ஓரளவுக்கு மேல் "காமிக்க" மாட்டார்கள் என்பதால் வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து தமிழ் இயக்குநர்கள் காமக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் இந்த திரைப்படங்களை 'சிறப்புக் காட்சி' பார்த்து விட்டு விமர்சிப்பது கொடுமை.

மீண்டும் இந்த உடை விஷயத்திற்கு வருவோம். நம்முடைய சமுதயம் மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா நாகரிகங்களிலும் சமுதாயங்களிலும் எல்லா காலங்களிலும், பெண்களின் உடை பல்வேறு கூறுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தெரிந்து கொள்ள நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. ஆதிமனிதர்கள் ஆடை அணிந்தது கிடையாது. அவர்கள் கண்டம் விட்டு கண்டம் செல்லும் போது அந்தந்த தட்ப வெட்ப சூழ்நிலைகளுக்கேற்ப அவர்களுக்கு உடை தேவைப்பட்டது. சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கடுக்கும் குளிரிலிருந்து காக்கவும், கடிக்கும் பூச்சிகள் மற்றும் ஆபத்தான ரசாயனங்களில் இருந்தும் காத்துக் கொள்ளவே ஆடைகள் தேவைப்பட்டது. இவ்வாறாகத் தோன்றிய ஆடை சமாச்சாரம் பின்பு ஒவ்வொரு நாகரிகத்திலும் அந்த சமுதாயத்தின் அடையாளமாக விளங்கிற்று. உதாரணத்திற்கு எகிப்திய உடைகள் ஒரு மாதிரியும், ஐரோப்பிய உடைகள் ஒரு மாதிரியும், ஆசிய கலாச்சாரங்களின் உடைகள் ஒரு மாதிரியும் இப்படி உடையைக் கண்டால் கலாச்சாரத்தை கண்டுகொள்ளும் அளவிற்கு அடையாளங்களாகின.

உடைகள் உடலின் பகுதிகளை மறைக்கவே என்றாலும் காலப்போக்கில் அவை சமுதாயத்தின் அளவுகோலாகவும், சமுதாயத்தை பிரதிபலிப்பதாகவும் ஆகிவிட்டன. கலாச்சாரங்கள் என்றுமே மாறும் தன்மை கொண்டவை. அவை ஒரே மாதிரியாக இருந்ததே இல்லை. இன்று நம்முடைய தலைவர்களும் தாய் தந்தையரும் சொல்லிக்கொண்டிருக்கும் கலாச்சாரத்திற்கு வயது கணக்கிட்டால் சில நூற்றாண்டுகளைத் தாண்டாது. தமிழச்சிகள் சில பத்து/ நூறு வருடங்களுக்கு முன்பு வரை ரவிக்கை அணிந்தது கிடையாது. தமிழ் மன்னர்கள் ஆண்ட காலங்களில் (சில நூற்றாண்டுகளுக்கு முன்பு) பெண்கள் மேலாடை அணியவில்லை. இன்று ஆடை என்பது பெண்ணின் அழகு பாகங்களை மறைத்திருந்தால் மட்டுமே கலாச்சாரத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது.


சாணக்கியருடைய அர்த்த சாஸ்திரத்தில் பெண்கள் பல மணம் செய்து கொள்வது பற்றியும், திருமணம் செய்து கொள்ளாமலே பல துணைவர்கள் மூலம் வாரிசுகளை பெற்றெடுப்பது பற்றியும், கணவனே வேறொருவன் மூலமாகத் தன் மணைவியை குழந்தை பெற்றெடுக்கச் செய்வது பற்றியும் குறிப்பிடுகிறார். இன்றைய சூழலில் நாம் இதை ஏற்றுக் கொள்வோமா?

ஆக எது கலாச்சாரம்? எது கலாச்சார சீரழிவு? முந்தைய காலங்களில் வாழ்ந்தவர்கள் கலாச்சார சீர்கேட்டில் வாழ்ந்தார்களா? நாம்தான் சரியான கலாச்சாரத்தில் வாழ்கிறோமா?

ஆக உடைக்கும் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே கிடையாது. ஆடை என்பது அந்தந்த காலங்களில் அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப பல்வேறு கூறுகளுக்குட்பட்டு அமைகிறது. எந்தெந்த காலகட்டத்தில் என்ன உடை அணியப்பட்டிருக்கின்றதோ, அது கலாச்சாரமாகிறதே தவிர கலாச்சாரம் உடைகளை தீர்மானிப்பதில்லை. இன்றைய நிலையில் பெண்கள் தங்களுக்கு சவுகரியமான உடைகளை அணிவதும், அவர்களின் அழகை விளம்பரப் படுத்தும் வகையில் ஆடைகள் அணிவதும் பெண்களின் சுதந்திரத்தின் அளவுகோலாகவே பார்க்கலாம். இதற்கான ஆய்வு ஒன்றை அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர் மேற்கொண்டிருக்கிறார். அதில் அவர் கண்டறிந்திருப்பது: "பெண்கள் எவ்வளவுக்கெவ்வளவு உடை கொஞ்சமாக அணிகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு சுதந்திரம் பெற்றிருக்கின்றனர் என்று அர்த்தம். அது அவர்களின் 'தனித்தியங்கும் திறனைக்' (being independent) காட்டுவதாகக் இருக்கிறது. மேலும் பெண்கள் எவ்வளவு அதிகமாக படிக்கிறார்களோ அதற்கு ஏற்றாற் போல் ஆடையின் அளவு குறைகிறது. அதுமட்டுமல்லாது, ஆண்/பெண் சதவிகிதம் (sex ratio) பெண்களின் ஆடைகளை நிர்ணயிக்கிறது. பெண்களின் ஆடை குறையக் குறைய ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது அல்லது பொருளாதாரம் வளர வளர பெண்களின் ஆடை அளவு குறைகிறது". இவையெல்லாம் சாதாரணமாக சொல்லப்பட்ட கருத்துக்கள் அல்ல. இவை யாவும் புள்ளியியல் ரீதியாக நிருபித்து விளக்குகிறார்.

பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை செய்து பொருளாதார ரீதியாக தனித்தியங்கும் திறன் பெறும் போது பெண்ணுக்கு ஆணின் துணை தேவைப்படுவது இல்லை. ஆனால் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்கும் போது அவள் ஆண்களுக்கு சொந்தமான பொருளாக (object) கருதப்படுகிறாள். சமுதாயத்தில் திருமணம் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் ஆணுக்குச் சொந்தமான பொருளாக்கப்படுகிறாள். காலம் காலமாக பெண்கள் கற்பு, காமம், திருமணம் போன்றவற்றால் அடக்கப்பட்டிருக்கிறாள். உயிரை விடவும் கற்பு பெரிதெனப் போற்றப்பட்டு பெண்ணை அடிமைப்டுத்தியிருக்கின்றனர். வள்ளுவனில் ஆரம்பித்து இளங்கோவடிகள் வரை அந்த கற்பு சமாச்சாரத்தை புனிதமாகக் காட்டி பெண்களுக்கெதிரான ஆயுதமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படியாகக் கற்பிக்கப்பட்ட பெண்ணை, அந்த ஆண்மகன் ஒரு பொருளைப் பாதுகாக்கும் பொருட்டு அங்கங்கள் தெரியாத வகையில் ஆடை அணியச் செய்கிறான். ஆக அவனுக்குச் சொந்தமான பொருள் வேறு எவருடைய பார்வைக்கும் விருந்தாவது விரும்பத்தக்கதாக இல்லை. ஆனால் மாறி வரும் இன்றைய சமுதாயத்தில் பெண்கள் படித்து, ஆண்களுக்கு இணையாக பொருளீட்டி தனித்தியங்கும் திறன் பெறும் போது அவளுக்கு அந்த கட்டுப்பாடுகள் தேவைப்படுடதில்லை. உடல் ரீதியான தேவைகளுக்கு அவள் பல ஆண்களிடம் அந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நியாயமாகிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஆடை என்பது மனித குலத்தின் பெருக்கத்திற்கான கருவியாகவும் செயல்படுகிறது. பெண்கள் குறைவாக ஆடை அணிந்தாலும் சரி, முழுக்கப் போர்த்தியிருந்தாலும் சரி அது பல சமயங்களில் ஆண்களைக் கவர்வதாக அமைகிறது. ஐரோப்பிய கலாச்சாரங்களில் மிக நீளமான உடை அணிந்தாலும் பெண்களின் வளைவுகளை கச்சிதமாக காட்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல இப்போது நம்முடைய கலாச்சாரத்தில் அணியப்படும் சேலை மற்றும் ரவிக்கையும் ஆண்களை கவர்வதாகவே இருக்கின்றது. ஆக ஆண்கள் பெண்களைக் கவர்வதற்காகவும், பெண்கள் ஆண்களைக் கவர்வதற்காகவும் 'கூட' உடை பயன்படுகிறது. இப்போது ஆபாசம் அல்லது எதிர்க்கப்படும் உடைகளை சற்றே உற்று கவனித்தால் அவை எல்லாம், பெண்ணின் வளைவுகளைத் தெளிவாகக் காண்பிப்பதாவகே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஜீன்ஸ் எனப்படும் மேலை நாட்டு ஆடை ஆண்கள் பெண்கள் இருவருமே அணிகிற ஒரு ஆடை. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உண்டு. ஆண்களுடைய ஜீன்ஸ் 'தொள தொள' எனவும், பெண்களுடையது இறுக்கமாகவும் இருக்கும். அதேபோண்று பெண்களுக்கான பிரத்தியேக டி-சர்ட் கூட இறுக்கமாக இருக்கும். இதை உற்று கவனித்தால், ஜீன்ஸ் பெண்களின் பின்னழகு மற்றும் கால்கள் அழகையும், மேல் சட்டைகள் பெண்களின் மார்பகத்தின் அழகையும் ஆடை மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருக்கிறது. பெண்களின் மேல் சட்டைகளில் கழுத்துக்கும் மார்புக்கும் இருக்கின்ற இடைவெளியை மூடாமல் தோல் தெரியும் பகுதியை அதிகரிப்பது அந்த அழகின் உதாரணத்தை (sample) உணர்த்துகிறது. இவையெல்லாத்துக்கும் ஆண்கள் மட்டும் காரணம் அல்ல. பெண்களுக்கு அவர்களின் அழகுக்கான அங்கீகாரம் தேவைப்படுகிறது. அவர்கள் மற்றவர்களின் கவனத்திற்குள்ளாவதை விரும்புகிறார்கள். இதை குற்றம் சொல்ல இயலாது. ஆனால் அதே சமயம் இவ்வாறு உடுத்திக் கொள்ளுகையில் ஆண்கள் பார்த்தால், அதையும் குற்றம் சொல்லக்கூடாது. சுருக்கமாக, இன்றைய சூழலில் பெண்கள் பேன்ட் (pants) அணிவது தேவையாகிறது. பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள். மோட்டார் பைக் ஓட்டுகிறார்கள். ஆக அவர்களுக்கு சவுகரியமானதும் கூட.

பெண்களுக்கு இரவு நேரங்களில் சவுகரியமாக இருக்கவும், கவர்ச்சியக இருக்கவும் பள்ளியறைகளில் (bedroom) அணிந்து கொள்ளவும் வடிவமைக்கப்பட்டது "நைட்டி" (NightWear) என்ற ஆடை. அது இன்றைய கால கட்டத்தில் இரவில் பயன்படுத்துவது மட்டுமன்றி, பகலிலும் அணிந்து கொண்டு தெருவிலும் அலைந்தால் இளைஞர்களின் மனசு அலை பாயாமல் என்ன செய்யும்?

அதே சமயம் ஆண்களுக்கு, பெண்களின் சில பாகங்களின் மீது அபரிமிதமான ஈர்ப்பு இருப்பது உடல் ரீதியான ஒன்று. அதை யாராலும் தடுக்க இயலாது. அந்த பாகங்கள் காலங்களுக்கேற்பவும், கலாச்சாரங்களுக்கேற்பவும் மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக ஒரு சீன கலாச்சாரத்தில் பெண்களின் கால்கள் மூடப்பட்டிருக்கும். அவை அந்நாட்டு ஆண்களுக்கு காம இச்சையை தூண்டுவதாக இருந்திருக்கிறது. அதே போல ஒரு ஆப்பிரிக்க நாட்டில், கழுத்துப் பகுதியை பெண்கள் மறைத்திருந்தனர். அவர்களின் மார்பகங்கள் திறந்தே இருந்தன. ஆனால் அந்நாட்டு ஆண்களுக்கு, பெண்ணின் மார்பகங்களை விட கழுத்துப்பகுதியே காம இச்சையை தூண்டியிருக்கிறது. ஆக இது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டே இருப்பது. ஆக இந்த உடல் ரீதியான ஈர்ப்புகளை கடுமையான சட்டம் கொண்டொ அல்லது சமுதாயக் கோட்பாடுகளாலோ எள்ளளவும் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.

பெண்கள் அவர்களின் உடைகளை தீர்மானிப்பது அவர்களின் சுதந்திரம். அதே சமயம், அதற்கான நேர் விளைவுகளையும், எதிர் விளைவுகளையும் சந்திப்பதும் அவர்கள் பொறுப்பு. அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் விரயமும் அவர்களையே சேரும்; அவர்களையே சாரும். ஆடைகளில் இருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டு கற்பழிப்பு வழக்குகளில் ஆண் சமுதாயத்தையே மொத்தமாக குற்றம் சொல்வதும் எற்றுக் கொள்ளத் தகாததாகிறது.

பெண்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடை அணிவதால் அவர்கள் சுதந்திரமடைகிறார்கள் என்பது உண்மையானால், அது வரவேற்கத்தக்கது. ஆனால் நம்முடைய hypocrite சமுதாயத்தில் "அரைகுறை ஆடையை ரசித்துவிட்டு கலாச்சார சீரழிவு பற்றி கவலைப்படுபவர்களும்", "அங்கம் தெரிய ஆடை அணிந்து விட்டு, அந்த இளைஞன் என்னை உற்றுப் பார்க்கிறான்" என்று சொல்லும் இருதரப்பினர் இருக்கும் வரை இது முடியப் போகும் பிரச்சினை அல்ல.

மீண்டும் சந்திப்போம்.

(தங்கள் பார்வையில் கொஞ்சம் பச்சையாகவும் கொச்சையாகவும் இருந்தால் மன்னிக்கவும். இந்த தலைப்பை அவ்வாறு அலசுவதே சரி என்று தோன்றியது.)
கல்லூரிகளில் உடை கட்டுப்பாடுகள் பற்றிய சூடான விவாதம்:



disclaimer: I do not own the source of the content. I am just embedding this video from another website.

வலிகள் மறத்துப் போனாலும்.. - கவிதை (11)

வலிகள் மறத்துப் போனாலும்
உதடுகள் மறுத்துப் பேசினாலும்

ஓடு இழந்த வீட்டுக்குள்
வேண்டாத நிலவொளியாய்
நிரம்பி வழிய

ஏனோ நீ வாழும் என்னுலகம்
உயிரோடிருக்குதடி
உறையாதிருக்குதடி

முத்தம் ஈரம் தருமோ?
காற்றில் முத்தமிட்டு முத்தமிட்டு
உதடுகள் காய்ந்ததுதான் மிச்சம்
உன் மார்புச்சூடு தெரிய
இனி நான்
எரிதனலில்தான் முகம் புதைக்க வேண்டும்

அமைதியாய் இருக்கையிலெல்லாம்
உன் சினுங்கல்கள்
உரக்கக் கேட்கும்
உயிரையே கேட்கும்.

உன் நினைவைக்
கருணைக் கொலை செய்ய
வேண்டினாலும்
இறைவன் கருணை எனக்குக் கிட்டாது போலும்.

காலாவதியான கனவுகளும்
கூட உயிர் கவிதயாகுது
வார்த்தைகள் வேண்டா
என்று மன்றாடினாலும்
கோர்வையாய் வந்து விழுகுதடி
என் கவிஞனும் சொல் பேச்சு கேளான்.
ஒரு நொடி ஓராயிரம் சிந்தனை!

1. இந்த சாவியை வைத்து திறக்க முடியாது என்று தெரிந்தும் அதை வைத்து ஒரு பூட்டை திறக்க முயற்சித்திருக்கிறீர்களா?
2. கணினியின் எலியை (mouse) இணைக்காமலேயே அதை பயன்படுத்த முயற்சித்து கோபம் அடைந்திருக்கிறீர்களா?
3. ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே சம்பந்தா சம்பந்தமில்லாத வேறு பல விஷயங்களை சிந்தித்திருக்கிறீர்களா?
4. ஒரே செயலை ஆயிரம் முறை செய்தாலும் அதை தவறாகவே செய்திருக்கிறீர்களா?
5. எல்லா விஷயத்திலும் ஒரு அதீத கனவு காண்கிறீர்களா? நடக்காத விஷயங்களை எல்லாம் கனவில் பாவித்து வருத்தப்பட்டதுண்டா? எப்போதும் கனவுலகில் இருக்கிறீர்களா?

ஆம் எனில் நீங்கள் என் நெருங்கிய நண்பர்.

இந்த முறை நான் எந்த ஒரு கருத்தையும் அல்ல செய்தியையும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. நான் வெகு நாட்களாக, இன்னும் சொல்லப்போனால் பல வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருப்பதை சொல்ல விழைகிறேன். இது மருத்துவ அல்லது மனோதத்துவ முறையில் சொல்வதானால் 'Thought disorder' or 'disordered thinking' என்று சொல்லலாம். அதாவது ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசிப்பதில் இருக்கும் சிரமம். என்னுடைய சிந்தனை ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நொடியும் என்று சொல்வது கூட சரியல்ல. ஒரு நொடியிலே பத்து விஷயங்கள் என் எண்ணத்தில் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். ஒரொரு சமயங்களில் எந்த எண்ணத்திற்கு என் செவிகொடுப்பது என்று கூட தெரியாமல் எல்லாவற்றையும் மறந்து விடுவதுண்டு. இதோ இந்த பதிவை எழுதுகையிலும் அதுதான் நடக்கிறது. இது சிந்தனையோடு மட்டுமல்லாமல் என் செயல்களிலும் ஒழுங்கீனத்தை ஏற்படுத்துகின்றது. எந்த விஷயத்தையும் என்னால் சரியாக நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை. இப்பொழுதெல்லாம் பல நேரங்களில் என் கணினியை உதவிக்கு நாடுகிறேன். என்னுடைய தினசரி வேலைகள் கூட அதில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பு எழுதி ஒட்டி வைத்திருக்கிறேன். ஒரு பத்து பேர் உங்களிடம் ஒரே நேரத்தில் உரக்கப் பேசினால் எப்படி இருக்கும் என்று கறபனை செய்து பாருங்கள். சத்தியமாக எனக்குள் பத்து குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்ன கொடும சார் இது?

ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அருவி போன்று எண்ணங்கள் வந்து கொட்டும். சமயங்களில் அந்த உளறல்களை அவர்களிடமே சொல்லி விடுவதுண்டு. என்னுடைய வெள்ளைக்கார ப்ரொபசரிடம் தமிழில் உளறியிருக்கிறேன். மிக முக்கியமான சந்திப்புகளில் கூட இது நடந்திருக்கிறது. என்னுடைய எண்ணங்களை ஒரு தாளில் எழுத முயற்சிக்கும் போது சிதறிப் போய் விடுகிறது. ஆக என்னுடைய எல்லா சிந்தனைகளும் விழலுக்கிறைத்த நீர் போல வீணகிப் போகிறது. இதற்கு அணைபோட முயற்சிக்கையில் உங்களோடு பகிர்கிறேன். இப்போது இந்த எண்ண ஓட்டம் இதோடு நிற்கிறது; தொடர்கையில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
இந்தியர்கள் அமெரிக்காவில் இன்னொரு கூவம் ஏற்படுத்துகிறார்களா? - பாகம் 2

எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன். இந்த விஷயத்தில் நான் நேரடியாக பாதிக்கப்பட்டதால்: YES, I AM BIASED.

முதல் பாகம் எழுதி மூன்று வாரங்கள் ஆயிற்று. இடையில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறிக்கொண்டே இருக்கு. எல்லாம் தலவலி. அப்புறம் இன்னிக்கு எழுதறத்துக்கு இன்னொரு முக்கியமான காரணம், ஆன்லைன் வீடியோஸ் எல்லாமே பாத்தாச்சு. இதுக்கு மேல பார்க்கறத்துக்கு ஒன்னுமே இல்லைன்னு ஆனத்துக்கு பிறகு எழுதலாமேன்னு தோனித்து.

கன்சல்டன்சி கொடுமை

இங்கு படித்து முடித்ததும் உடனே வேலை தேடியே ஆக வேண்டிய கட்டாயம். வீட்டுல உட்கார்ந்து வேர்கடலை சாப்பிட்ட படி வேலை தேட முடியாது. இங்க ஒரு மாசம் வேலை இல்லாம இருந்தா முடிஞ்சுது கதை (செல்போன் அது இதுன்னு கணக்கு போட்டா ஒரு 200 டாலர் இல்லாம கத ஓடாது). அதுனால என்னமோ நம்மள ஒருத்தன் கத்தியோட துரத்திகிட்டு வரும்போது எப்டி ஓடுவோமோ அப்டி ஒரு பதற்றம், வேகம் எல்லாம். யாராச்சும் சொந்தகாரங்க, நண்பர்கள் இருந்தா நல்லது; அவங்க வீட்ல போயி ஓசி சாப்பாடு சாப்பிட்டுகிட்டு வேலை தேடலாம். அது இல்லைன்னா ரொம்ப கஷ்டம்.

சரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அமெரிக்கால வேலை செய்யறத்துக்கு அந்தந்த தகுதிகளுக்கு ஏற்றார்போல் விசா (visa-H1, L1, B1, J1...) இருக்கு. இதுல ரொம்ப பிரபலமானது H-1 விசா. நீங்க செய்தித்தாள் அங்க இங்க நிறையா படிச்சு இருப்பீங்க. இந்த H1 விசாவுக்கு அப்டி என்ன மவுசுன்னா... பின்னாடி இந்த ஊரோட 'பச்ச கார்டு' (Green Card), அமெரிக்க குடியுரிமைக்கு எல்லாம் அப்ளை பன்ன ரொம்ப வசதி. நம்மாளு ஊர்லேந்து வரும் போதே கணக்கு போட்டுட்டுதான்யா வர்றான். மொதல்ல ரெண்டு வருசம் படிப்பு, அப்புறம் H1, அப்புறம் கல்யாணம், பச்ச அட்டை, குடியுரிமை - இதுதான் டிபிகல் ப்ளான். ஊர்ல தானியம் கொட்டி வைப்பதற்கு இருக்கும் குதிர்ல நம்மாளு பணம் சேக்கனும்னு கணக்கு போடறான்.

விசா கதய விட்டுட்டு கன்சல்டன்சி பக்கம் கொஞ்சம் திரும்பி பார்ப்போம். இந்த 'கன்சல்டன்சி' என்னன்னு பச்சையா சொல்லனும்னா நம்ம குடிய கெடுக்க வந்தவனுங்க. நெசந்தான். ஏதோ ஒன்னு ரெண்டு பேர் நல்லவங்களா இருந்தா அவங்க எச்ஸப்ஷன்ஸ். Exception does not make rule. 90% கன்சல்டன்சி வெச்சிருக்கிறவன் ஏமாத்திதான் சார் பொழைக்கறான். எவனோ ஒருத்தன் சாப்பட்டுல மண் அள்ளி போட்டுட்டு தான் நம்மாளு டாலர ரூபாயா மாத்தறான். இல்லேன்னு சத்தியம் பண்ண சொல்லுங்க நான் நாளைக்கே ஊருக்கு மூட்டை கட்டிகிட்டு கெளம்பிடறேன் (பொய் சத்தியம் செல்லாது; என்ன மாதிரி ஆளுங்கள ஊர விட்டு கெளப்பினா போதும்னு பொய் சத்தியம் செய்வாங்க).

சுருக்கமா சொல்லனும்னா, தகுதி இல்லாத ஆட்களை போலியா அமெரிக்க கம்பெனிகள்ல வேலைக்கு அமர்த்தறது. இதுதான் இவங்க பண்றது. இது போலின்னு தெரிஞ்சும் தொடர்ந்து நடந்துகிட்டேதான் இருக்கு. ஏன்னுதான் புரியல. அது ஒரு கருப்பு உலகம். நம்முடைய கண்களை கட்டித்தான் அங்கே உள்ளே அனுமதிப்பார்கள். வாய்கள் உண்மை பேசக்கூடாது. அசிங்கப்பட்டாலும், அட! இது என்ன நம்ம ஊரா? அசிங்கப்பட்டாதான் என்ன? பரவாயில்ல என்று பழகிக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தத்தில் அங்கே நான் கெளரவமான திருடனாக்கப்படுகிறேன். காலையிலிருந்து பசியோடு வேலை செய்து கிடைத்த ஒரு ரூபாயில் மாலை நேரம் கால் வயிற்றிற்கு சாப்பிடும் சிறுவனிடமிருந்து திருடி உண்ணும் கீழ்த்தரமானவனாக்கப் படுகிறேன்.

இன்றைய தேதியில் ஆண்டொன்றுக்கு மொத்தம் 65,000 H1 விசா அனுமதிக்கப்படுகிறது. இதில் எழுபதிலிருந்து எண்பது சதவிகிதம் நம்ம ஆட்கள் தான். அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர்களுக்காக தனியாக 20,000 H1 விசா அனுமதி உண்டு. சென்ற ஆண்டு, முதல் நாளிலேயே இந்த அளவைத்தாண்டி எல்லோரையும் 'ஆ' காட்ட வெச்சுது. அதுக்கு லாட்டரி கொண்டு வந்தாங்க. அதாவது வந்த அப்ளிகேஷன்ல செலக்ட் பண்றதுக்காக. ஊர் பாஷைல சொல்லனும்னா குலுக்கி போட்டு எடுக்கறது. ஆக நமக்கு கெடைக்குமா கெடைக்காதோன்னு பயம். அதுக்கும் ஒரு வழி கண்டு புடிச்சோம். என்னன்னா, நம்மாளு ஒருத்தன் ஒரு விசாவுக்கு அப்ளை பண்றது இல்ல. மல்டிபுள் அப்ளிகேஷன்ஸ். கிடைக்கின்ற வாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சி. அதுக்காகவே இந்த தடவை வெச்சாங்கல்ல ஆப்பு. இந்த முறை ஒருவர் ஒரு அப்ளிகேஷன்தான் போடலாம். அவனும் என்னன்னமோ செஞ்சு பாக்கறான். நாங்க உடுவோமா என்ன?

இந்த கதயெல்லாம் உடு; இதுல உனக்கென்ன ப்ரச்சன? அப்டின்னு கேக்கறது காதுல உழுவுது. ஆம். பாதிக்கப்பட்டேன். நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

என்னோட படிச்சவங்க எல்லாம் 'ஆறு' வருசம் அனுபவம் போட்டு வேல கேக்கறாங்க சார். நானும் அவங்களும் சேந்து ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ணினா யார எடுப்பான் சொல்லுங்க? இவங்க எல்லாரும் ஊர விட்டு வந்தே ரெண்டு வருஷந்தான் ஆவுது. அதுக்குள்ள ஆறு வருச அனுபவம். நேத்தி வரைக்கும் என்னோட மொக்க போட்டவன், அனுபவமுள்ள ஆபீசர் ஆயிடறான் சார்.

நானும் நெறைய கன்சல்டன்சிகிட்ட பேசி பாத்துட்டேன். ஒருத்தனுக்கும் நாம தப்பு பண்றோங்கற உணர்வே இல்லைங்க. அடங்கொக்கமக்கா! சரி, எனக்கு அஞ்சு வருசம் அனுபவம் போட்டா நான் எப்டிடா இன்டர்வ்யூல பாஸ் பண்ணுவேன்? அப்டின்னு கேட்டா... அதுக்குத்தான் ஒரு ஐடியா இருக்குல்ல அப்டிங்கறான்; சார்...நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நம்ம கிட்ட அனுபவஸ்தர்கள் நிறையா இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர் நீங்கன்னு சொல்லி டெலிபோன்ல இன்டெர்வியூ முடிச்சுட்டா போவுது. அடங்கொன்னியா! இப்போ சரி, நான் வேலைக்கு போனதுக்கப்புறம் சொதப்பினா என்ன பண்றது? அதுக்கும் ரெடியா ஒரு பதில்: "உனக்கு மூளையே இல்ல சார். இவ்ளோ தூரம் யோசிக்கறவன் இத எப்டி விடுவேன்? அதுக்கும் கைவசம் ஒரு மொள்ளமாரித்தனம் இருக்கு. நீங்க அங்க போயி வேல தெரிலைன்னா எங்களுக்கு ஒரு ஈமெயில் பண்ணுங்க... அடுத்த நாள் அத நாங்க எப்டி பண்றதுன்னு சொல்லி ரிப்ளை பண்றோம்"


அட! தப்பு பண்றத விடுங்க. மாட்டிகிட்டு மானங்கெட்டு அசிங்கப்பட்டா என்ன பண்றதுன்னு கூட பயம் கெடயாது. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன ஒரு கம்பெனில உண்மை தெரிஞ்சு விரட்டி விட்டுட்டானுங்க. அவன் என்ன செஞ்சான்? செத்தா போயிட்டான்? அடுத்த கம்பெனில போயி வேலைக்கு சேந்தாச்சு. ஆக என் அருமை நண்பன் சுயமரியாதை இல்லாத ஜடமாகிறான்.

யப்பா....தல சுத்துதில்ல? இதுல இன்னும் நிறைய வயித்தெரிச்சல் இருக்கு. அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா நான் ரொம்ப கெட்டவனாயிடுவேன். அதுனால இதோட நிறுத்திக்கறேன்.

கடைசி: இவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் நம்முடய மானத்தை, மரியாதையை, மனசாட்சியை விற்றுக் கொண்டிருக்கிறோம்.

Context: My organization is against my H1 visa sponsorship. They were not able to find a person with qualifications but at the sametime they are not willing to sponsor a work visa for me. This is how it has spread a negative connotation about H1b visas. It is already on negative high and is not very far that whole consultancy idea getting abolished.
இந்தியர்கள் அமெரிக்காவில் இன்னொரு கூவம் ஏற்படுத்துகிறார்களா?

எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன்.

என் வலைப்பதிவு இத்தனை நாட்கள் அமைதியாகவே இருந்திருக்கிறது. அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து. எழுதுவதற்கு ஒன்றும் இல்லையா? அதெல்லாம் ஒன்னுமில்ல. சோம்பேறித்தனம். யார் யார் மேலயோ கோபம், வெறுப்பு, ஆத்திரம். எழுதல. வெறுப்புல நீ ஏன்டா எழுதலைன்னு கேக்கறீங்க. அட, நான் எதுவுமே உருப்டியா செய்யல. அதுல ஒன்னு எழுதல. சரி விடுங்க. அது நான் மேல்படிப்பு முடித்து வேலை தேடி அல்லாடிய காலம்.

நம்ம ஊர்ல ஒரு நெனப்பு. என்னமோ அமெரிக்கா வந்துட்டா எல்லாம் சுலபமா அமைஞ்சுடும் அப்டின்னு. என்னுடைய அனுபவத்துல இனிமே யாராச்சும் அமெரிக்கா வர்றதுக்கு வழி கேட்டா, தம்பி ஊர்லயே இருந்துடுங்க அப்டின்னு சொல்லிடுவேன். ஏன்னா இங்க வந்து படுற பாடு பட்டவனுக்குத்தான் தெரியும். இதுல கொடுமை என்னன்னா, நாம இத சொன்னா: தோ பார்றா அங்கபோயி நல்ல சம்பாதிச்சுட்டு பேசறான் பாரு அப்டின்னு சொல்றானுங்க.

சார் நெசமாத்தான் சார் சொல்றோம். இங்க படிக்க வர்றவனுங்க பாதி பேர் சுயமரியாதய தொலைச்சுட்டு, இந்த ஊர்க்காறன ஏமாத்திட்டுதான் வேல செய்ய வேண்டி இருக்கு. இது கிட்டத்தட்ட ஒரு சுத்தம் செய்ய முடியாத கூவம் போலத்தான் இருக்கு. உண்மைய சொல்லட்டுமா? நம்புவீங்களா?

முதல் கட்டம்: இந்தியாவிலிருந்து அமெரிக்கா படிக்க வருகிறான் ஒரு இளைஞன்.

இந்தியாவிலிருந்து ஒரு இளைஞன் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட கனவுகளொடும் கற்பனைகளொடும் வந்து சேர்கிறான். இங்க ஒரு நல்ல யுனிவர்சிடில படிச்சா ஓகே. லுச்சாவா இருந்தா அவ்ளோதான். இங்க வர்ற பசங்களுக்கு அவனவனுக்கு ஏத்தா மாதிரி ஒரொரு கனவு. சில பேர் நெசமாவே படிக்க வர்றான். சில பேர் காசு வேணும்னு வர்றான். அட இன்னும் சில பேர் நல்ல பொண்ணு கெடைக்கும்னு வர்றான். இங்க வர்ற பாதி பேருக்குத்தாங்க படிக்க அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்குது. நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா ஊக்கத்தொகை, ஸ்காலர்ஷிப், இல்ல என்னமோ ஒன்னு. அதாவது ஒரு பேராசிரியர் கிட்ட ஆராய்ச்சியோ, இல்ல உதவியாளரா இருந்து படிக்கறத்துக்கு பண உதவி கெடைக்கறது. அப்டி கெடைச்சுட்டா ஓகே. இல்லேன்னா ரொம்ப கஷ்டம். ஏன்னா இந்த ஊர்ல நம்மளால செலவு செஞ்சு படிக்க முடியாது (அட்லீஸ்ட் நடுத்தர வர்க்கத்துனால).

இந்த மாதிரி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்கலேன்னா என்ன செய்யறான் நம்ம ஆளுன்னுதான் கேள்வி? யாருக்காச்சும் தெரியுமா?

நம்ம ஊர்ல சொல்லும் போது பெருமையா நான் வெளில பார்ட் டைம் வொர்க் செஞ்சு படிக்கறேன்னு சொல்றது. அது அமெரிக்கால சட்ட விரோதம்னு யாருக்காச்சும் தெரியுமா?(யுனிவர்சிடில பார்ட் டைம் வேல செய்யறது ஓகே. வெளில வேல செஞ்சா அது தப்பு). ஏதோ ஒரு சதவிகிதம் பேருக்குத்தான் தெரியும்னு நெனைக்கறேன். ஏன்னா சமீபத்துல விஜய் டிவி "காபி வித் அனு" ப்ரோக்ராம் பாத்தேன். அதுல வந்த தன்வி (ஏ. ஆர். ஆஸ்தான பாடகி: முன்பேவா என் அன்பேவா...) சொல்றாங்க: "அமெரிக்கால நான் க்ரோஸரி ஷாப்ல வேல செஞ்சுகிட்டேதான் படிச்சேன்" அப்டின்னு. அது இங்க இருக்கறவங்ளுக்கு தெரியும் சட்ட விரோதம்னு.

இப்டி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்காதவன் என்ன செய்யறான்? மளிகை கடைலயோ, இல்ல பெட்ரோல் பங்க்லயோ இல்ல வேற எதாச்சும் கடைலயோ வேல செய்யறான். எப்டின்னு கேட்டீங்கன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க. 12 மணி நேரம் நிக்கறான் சார். ஒரே எடத்துல. இவனுக்கு சம்பளம் ஒரு மணி நேரத்துக்கு 6 டாலர் (எடத்துக்கு எடம் மாறுபடும்). வார நாட்கள்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நிக்கறான்னா... வார இறுதில 12 மணி நேரம். இதுல என்ன சார் பிரச்சன அப்டின்னு கேக்கறது காதுல விழுது. நம்மாளு ஆறு டாலருக்கு வேல செய்யறதால உள்ளூர்க்காரனோட வேல போயிடுது. இங்க எப்டின்னா... ஒரொரு மாநிலத்துலயும் குறைந்தபட்ச ஊதியம் அப்டின்னு வெச்சுருக்கானுங்க. ஆனா நம்மாளு 10 டாலர் வாங்கற எடத்துல 6 டாலருக்கு வேல செய்யறான். இவன் போனா போன செய்ய வேண்டிய வேலை மட்டும் செய்யறதில்ல. சுயமரியாதய தொலச்சுட்டு கக்கூஸ் கழுவற வேலை வரைக்கும் செய்யறான். மொதல்ல கொஞச நாளைக்கு அத்தியவசிய தேவைக்காக வேல செய்யறவன் பிறகு காசு மேல ஆச வந்து முழுக்க முழுக்க தொழிலாளி ஆயிடறான். கேட்டா வேற வழி இல்ல அப்டிங்கறான். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேல செஞ்சா இவன் எங்க படிக்கறது. அப்புறம் கொஞ்ச நாள்ல ஏதோ பாஸ் பன்னினா போதும் சாமின்னு வெளில வர்றான்.

இவனுங்கள்ல பல பேர் இந்த ஊர் போலிஸ்கிட்ட மாட்டிக்காம இருக்கறதும் இல்ல. அப்பப்ப எவனாச்சும் மாட்டிகிட்டேதான் இருக்கான். ஆனா சட்டவிரோதமா வேல செய்யறவன் எண்ணிக்கை மட்டும் கொறயல. இங்க வந்து ரெண்டு வருஷம் ஆன பசங்க அது என்னமோ தப்பே இல்லைங்கற மாதிரி ஒரு தப்பான தோற்றத்த ஏற்படுத்தி நம்மாளயும் இந்த மாதிரி ஆக்கிடறான். இதுல தப்பிச்சு வர்ற பசங்க கம்மிதான். நானும் ஒரு அஞ்சு நாள் வேலைக்கு போனேன். அப்றம் இந்த மனசாட்சி சும்மா இருக்காம திரும்பி வந்துட்டேன்.

இவ்ளோ கஸ்டபட்டு படிச்சு வெளில வந்து அவன் என்ன பண்றான்னு நீங்க கேக்கனும். நீங்க கேக்கலைன்னாலும் நான் சொல்லத்தான் போறேன். மீண்டும் சந்திப்போம்.