Pages

வண்ணத்துப்பூச்சி - இயற்கையின் அதிசயம் (Butterfly's life cycle)

சினூக் பாஸ் புகைப்படங்கள் (Chinook Pass Drive)

கடவுளாகிவிடு

காலத்தைப் பற்றி நிறைய முறை சிந்தித்திருக்கிறேன். ஆனால் காலம் யாருக்கும் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. காலம் மிக அடர்த்தியானது. தொடர்ச்சியானது. அது தன்னை யாரும் நெருங்க விடுவதே இல்லை. மிக ரகசியமாகவே இருக்கிறது. ஆனால் சுதந்திரமாக நாம் காலத்தினுள்ளே பயனிக்கிறோம். காலம் நமக்குள்ளே உறைகிறது. அது அமைதியாக இருப்பதாகவே தோற்றமளிக்கிறது. ஆரவாரமான இந்த உலகத்தில் அதன் சத்தம் நம் காதில் விழுவதில்லை. வீட்டில் யாருமில்லாமலிருக்கும் போது நிலவும் அமைதியில் கடிகாரச் சத்தமும், குழாயிலிருந்து சொட்டும் நீரும் நமக்கு பெரும் சத்தம் போடுவதாகத் தோன்றும். காலத்தின் சப்தம் எப்போதும் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை. நாம் வேறு சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு காலத்தை ஊமை என்று கருதிவிட்டோம். காலத்திற்கு ஆணவம் கிடையாது. தற்குறியாக என்றுமே இருந்ததில்லை. ஆனால் காலம் தான் இருப்பதாக உணர வைக்க முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம்தான் காது கேளாதவர்களாகி விட்டோம். காலத்தை உணர்ந்தால், நாம் கடவுளை உணர்ந்தவர்களாகி விடுவோம்.

காலத்தை யார் அளவிட்டது? யாருக்கு அவ்வளவு அதீத அறிவும் ஞானமும் இருக்கிறது? மனிதன் அதை நாட்களாகவும், மணித் துளிகளாகவும், அதனினும் சிறிய அளவாகவும் பிரித்து விட்டான். பிரித்து விட்டதால் காலம் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக நினைக்கிறான். அது ஒரு சிறு குழந்தையின் செயலைப் போன்றது. மனிதனுக்கு தான் அறிய முடியாத ஒன்று, அளவிட முடியாத ஒன்று, அல்லது தன் அறிவிற்கு எட்டாத ஒன்று இருக்குமாயின் அதை ஏதாவதொன்று கொண்டு பிரித்து விடுவான். பிரித்து விட்டால் அது அளவிட முடிந்ததாகிவிடும். இரவில் அண்ணார்ந்து வான்வெளியைப் பார்த்திருக்கிறீர்களா? அது காலையில் வெளிர்நீலக் கம்பளமாகவும், இரவில் இருட்டுப் பள்ளம் போலவும் தோற்றமளிக்கும். அதன் தொடக்கம் எங்கிருக்கிறது? முடிவுதான் எங்கே? தொடக்கமும் முடிவும் அறிய முடியாத ஒன்று. காலமும் வெளியும் இரட்டைக் குழந்தைகள். அவைகளுக்கு அளவீடுகள் அடங்காது. அவைதான் மற்றவற்றின் அளவுகளை நிர்ணயிக்கும். மனிதன் இரண்டையும் முழுவதுமாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். தவறொன்றுமில்லை. காலத்தையும், வெளியையும் கூறு போடலாம். ஆனால் ஒரு போதும் வென்று விட்டதாக மார்தட்டிக் கொள்ளக்கூடாது.

காலம் தன்னுள் பல ரகசியங்களை ஒளித்து வைத்துக்கொண்டே இருக்கிறது. உலகில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப் போகிற ஒவ்வொரு உயிரையும், மனித நாகரிகங்களையும், கலாச்சாரங்களையும், இயற்கை சீற்றங்களையும், போர்களையும் கண்காணித்துக் கொண்டே அமைதியாக தன்னுள் தேக்கி வைக்கிறது. மனிதனின் பார்வையால் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வரை மட்டுமே பயனிக்க முடியும். இந்த பிரபஞ்சத்தின் மூலங்களை அணு அளவு வரை ஆராய முடியும். ஆனால் அதன் மூலங்கள் அணுவுக்கு அணுவும், அவ்வணுவுக்கு அணுவும், அதனினும் அதனினும் சிறியது என்று சென்று கொண்டே இருக்கும். மனிதனின் அறிவுக்கு எட்டியது அணுவே. ஆதலால், மனிதனின் பார்வையில்தான் கோளாறு. மனிதன் தன்னால் இயலாத பட்சத்தில் அதுதான் இறுதியான உண்மை என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள காரணம் தேடுகிறான். ஆனால் இறுதியான உண்மை என்னவென்று காலம் மட்டுமே அறியும். காலம் அமரத்துவத்தின் அகராதி. காலமும் வெளியும் எப்போதுமே இருந்திருக்கிறது. பிரபஞ்சம் என்பது வெளியின் மறுவடிவம். ஒருவர் இறந்துவிட்டால் அவர் "காலமாகி" விட்டதாக சொல்கிறோம். அதுபோலத்தான் நாமும், மரங்களும், செடிகளும், விலங்குகளும் எல்லாமும். நாமும், காலமும், வெளியும், பிரபஞ்சமும் ஒன்றே என்ற உண்மை தெரிந்த நேரத்தில் நாம் கடவுளாகிவிடுவோம்.
கரைதேடும் நினைவுகள்

அப்போது எனக்கு ஆறேழு வயது இருக்கும். எந்தக் கவலைகளும் இல்லாமல் சுற்றித்திரிந்த காலம் அது. ஆனந்தத்தை நாம் தேடிப்போகாமல், ஆனந்தம் நமக்குள்ளே வாழும் காலம். இன்பத்தை தேடியும் நாடியும் போனதில்லை. கறைகள் படியாத மனதோடு கரைகள் அறியாத காட்டாறு போன்று அலைந்த சுகம் வேறு எப்போதும் வாராது. பல நாட்கள் பட்டாம்பூச்சியைப் பின் தொடர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறேன். காவிரியில் நானும் கரைந்து கெளுத்தி மீன்களோடு சம்பாஷனை செய்திருக்கிறேன். சாணி தெளித்த வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டே நிலவோடும் நட்சத்திரங்களோடும் தர்க்கவாதம் செய்திருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் பூத்திருக்கும் நந்தியாவட்டை செடிகளின் வாசனைப் பேச்சிலும் மலர்ந்த புன்னகயையும் ரசித்துக்கொண்டே வேப்பமர நிழலில் நின்று செஞ்சூரியனுக்கு வணக்கம் செலுத்தி என் நாளை ஆரம்பித்திருக்கிறேன். மாமரத்தில் ஏறி அதில் படர்ந்திருக்கும் களை பறித்துவிட்டு இறங்கும் போது, அது சொல்லும் நன்றிகளுக்கு, நமக்குள் இதெல்லாம் என்ன சம்பிரதாயம் என்று கூறி நட்பு பாராட்டியிருக்கிறேன். திண்பண்டங்களை ஒரு போதும் தனியாக உண்டது இல்லை. காக்கைகளும் அணில்களும் என் சமபந்தியில் உண்டு. என் பாட்டி கோலம் போட பத்து நிமிடம் தாமதமானாலும் அணில்கள் வந்து தேட ஆரம்பித்துவிடும். அணில்களுக்கும் எறும்புகளுக்கும்தான் முதலில் உணவு. எல்லாருக்கும் அதற்கு பிறகுதான். கோலம் போட்ட ஒரு மணி நேரத்தில் எங்கள் வீட்டு வாசலில் இன்னொரு நண்பர் வந்து விடுவார். அவரை நாய் என்று சொன்னால் என் பாட்டிக்கு கோபம் வந்து விடும். அவருக்கும் சாதம் படைத்துவிட்டு சமையலை தொடர்வாள் என் பாட்டி. அதற்குள் வீட்டின் உள்ளே வாழும் பூனைக்கு என் தாத்தா பால் பரிமாறிக் கொண்டிருப்பார். அடுப்பில் உளை கொதிக்கும் போதே கொல்லையில் சென்று சுள்ளி பொறுக்கிக் கொண்டு வந்து வெந்நீர் அடுப்பு பற்ற வைத்தாகிவிடும். எரிபொருளுக்காக மரங்களை வெட்டியதாக எனக்கு நினைவில்லை. தாத்தா குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகும் போது, மாட்டுக் கொட்டகையின் வாசலில் பூத்திருக்கும் செம்பருத்திகளை பறித்துக் கொண்டு செல்வார். தோட்டத்தில் இருந்து சற்றுமுன் பறித்த முளைக்கீரையையும், வெண்டைக்காய்களையும், கொத்தவரையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போவாள் என் பாட்டியின் சிநேகிதி. நீர் கலக்காத கறந்த பசும்பால் எனக்குப் பிடிக்கும் என்று தனியே கொண்டு வந்து கொடுப்பாள் தெரு கடைசியில் இருக்கும் என் அத்தை.

மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தீனியும் வைக்கோலும் வைப்பது என் வேலை. நான் வருவதைக் கண்டாலே கன்றுகள் துள்ள ஆரம்பித்துவிடும். அவர்களை அவிழ்த்துவிட்டு சுதந்திரமாக விளையாட விடுவேன். நானும் அவர்களோடு ஓடிப்பிடித்து விளையாடுவேன். கன்றுகள் தன் தாயோடு நின்று பசியாறும் போது பாசத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். தாய்ப்பசு என்னை நோக்கி, நீயுன் என் பிள்ளைதான் என்று சொல்வது போல சொல்லும். நான் கன்றுகளை அவிழ்த்து விட்டதற்காக பாட்டி திட்டுவாள். வீட்டில் மாடு இருக்கும் போதே வெளியில் பால் வாங்க வைக்கிறாயே என்று கடிந்து கொள்வாள். போனால் போகட்டும் பாட்டி, பாவம் என்று சொல்வேன். காளை மாடுகளுக்கு லாடம் அடிக்கும் போது அழுவேன். மாட்டுக்கு இது செய்யவில்லை என்றால் கால் வலிக்கும் என்று மாமா என்னை சமாதானப்படுத்துவார். வண்டி மாடுகளுக்கு கழுத்து வலிக்காதா என்று கேட்டு வில் வண்டியில் ஏற அடம் பிடிப்பேன்.

களத்து மேட்டிற்கு சென்று, விதை விதைத்துக் கொண்டிருக்கும் அக்காக்களையும், போரடித்துக் கொண்டிருக்கும் அண்ணன்களையும் சொந்தம் கொண்டாடி மதிய வெயிலில் எங்கள் வயலோரம் இருக்கும் மரத்தில் இருந்து இளநீரும் நொங்கும் சாப்பிட்டிருக்கிறேன். பனநொங்கு சாப்பிட்ட பிறகு அதன் காயை குச்சியின் முனைகளில் பொருத்தி அந்த வண்டியை ஊர் முழுக்க ஓட்டியிருக்கிறேன். தென்னந்தோப்புகளின் நிழலில் விழுந்து கிடக்கும் குறும்பைகளைப் பொறுக்கி வந்து ஈர்க்குச்சிகளில் பொருத்தி விளையாடுவேன். கொல்லையில் விழுந்து கிடக்கும் குச்சிகளைப் எடுத்து வளைத்து, தொங்கும் கொடிகளிலிருந்து நூல் பறித்துக் கட்டி வில்லும் அம்பும் செய்யும் வித்தையைக் கற்றிருந்தேன். சிவந்த கோவைப்பழங்கள் பறித்து ஆடுகளுக்குக் கொடுத்துவிட்டு என் சிலேட்டை அழிக்கவும் பயன்படுத்திய ஞாபகம். பூவரச இலைகளில் ஊதல் செய்து இசை பயின்று ராகங்கள் பாட முயற்ச்சித்திருக்கிறேன். தென்னங்கீற்றுகளில் பாம்பு செய்து என் சகோதரிகளை பயமுறுத்துவேன். வீட்டு முற்றத்தில் தரை உடைந்து இருக்கும் சிறு பகுதியில் தெரியும் மண்ணில் நெல் விதைத்து கொட்டாங்கச்சிகளால் நீர்ப்பாசனம் செய்து விவசாயம் செய்திருக்கிறேன். களிமண்ணால் கோவில் கட்டி சாமி செய்து கருவக்காட்டிற்கு அருகில் இருக்கும் வாசனை மரமல்லிகளைப் பறித்து வந்து அர்ச்சனை செய்திருக்கிறேன். எனக்கு இன்றும் நினைவிக்கு வருகிறது.

ஊரில் திருவிழா என்றால் கூத்தும் கும்மாளமும் கொண்டாட்டமுமாகி விடும். நண்பர்கள் எல்லாரும் வருவார்கள். உறவினர் யாரும் வராமல் இருக்க மாட்டார்கள். கோவிலில் சாமி புறப்பாட்டின் போது நாகஸ்வரக் கலைஞர்களை மல்லாரி வாசிக்கச் சொல்லி அந்த இசைக்கு ஏற்ப மெதுவாக ஆடுவோம். சாமி அலங்கரிக்க, பூப்பறிக்க ஒரு படையாக செல்வோம். சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் ஆச்சரியப்படும் வகையில் பந்தியில் பரிமாறுவோம். அதில் பாராட்டுக்களுக்காக மட்டுமின்றி பரிமாறும் போது பெறும் அன்புக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் செய்வோம். அந்த மகிழ்ச்சி சாப்பிடும் போது பெறுவதைவிட பெரியது, சித்திரையில் முதன் முதலாக வயலை உழும் போது என்னை பூசை செய்யச் சொல்வார்கள். அது ராசிக்காகவா இல்லை குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாலா என்று தெரியாது. அந்த நேரங்களில் எனக்குக் கிடைக்கும் பெருமை மிகவும் பிடிக்கும். மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னமே யோசிக்க ஆரம்பித்து விடுவோம். ஊரில் இருக்கும் கன்றுகள் யாவும் சிறுவர்களின் கைவண்ணத்தில் அலங்கரிக்கப்படும். கன்றுகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டே மறுகையால் கன்றின் கழுத்தில் கட்டியிருக்கும் மணிகளை அடித்துக் கொண்டே செல்வோம். கடைசியில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு, கண்றுகளுக்கு பூசை செய்வோம். நவராத்திரி நாட்களில் கூட்டமாக சிறுவர்கள் ஒன்று சேர்ந்து எல்லா வீட்டு வாசலுக்கும் சென்று "நவராத்திரி கொலு கொலு சுண்டல்" என்று ஒரே குரலில் பாடி சுண்டல் வாங்கி உண்போம்.

இங்கு பதிவும் செய்யப்பட்டவை காலப்பெருவெளியில் ஒரு துகளுக்கும் குறைவே. இன்னும் நிறைய நிறைய நினைவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இன்றைய காலகட்டம் முற்றிலும் வேறு. பசுக்களோடும், மரங்களோடும் அன்பு செய்தவன், "நான்" என்னும் தனிச்சிறையில் என்னை நானே அடைத்துக் கொண்டுவிட்டேன். மனதில் ஏகப்பட்ட குறைகளோடும் அழுத்தத்தோடும் அலைந்து கொண்டிருக்கிறேன். காலவெள்ளம் என்னை எங்கோ அடித்துக் கொண்டு வந்துவிட்டது, இந்த நினைவுகளை நினைக்கையில் எல்லாம் என் மனதில் அந்த நந்தியாவட்டை வாசமும், பூவரச இலை ஊதலின் இசையும் என் மனதை வருடும். என்னையும் அறியாமல் கண்ணோரம் நீர் கசியும். நான் ஏங்குவதை விடவும், ஊரில் நான் விட்டு வந்த வேப்ப மரமும், ஆற்றங்கரையும் ஏங்கும் என்று தெரியும். நான் பயனித்த அதே சுவடுகள் மீண்டும் என் காலடிக்காக காத்துக் கிடக்கும் என்றே நான் நம்புகிறேன். நாகரிகப் போர்வையில் என்னை நானே தொலைத்துவிட்டதாகவே நினைக்கிறேன். என் நினைவுகள் யாவும் அவற்றை மறுக்கின்றன. மீண்டும் ஒரு நாள் அதே சுகம் வருமென்று காத்திருக்கிறேன்.
காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!

ராஜா சர்.முத்தையா செட்டியார் தன் அறுபதாம் வயது நிறைவு விழாவை 1941ல் கொண்டாடினார். பிராமணர்கள் 60 பேருக்கு 60 மாடு, 60 வீடு, 60 வேட்டி, துண்டு தானம் கொடுத்தார். பிராமணர் அல்லாதாரின் நலம் காக்கும், "ஜஸ்டிஸ் கட்சி'யைச் சேர்ந்தவர் ராஜா முத்தையா செட்டியார். இவர் இப்படி பிராமணர்களுக்கு தானம் கொடுத்தது, மூட நம்பிக்கை என்றும், சமூக விடுதலைக்கு எதிரான செயல் என்றும் காரசாரமாக ஒரு தலையங்கம் எழுதினார் அண்ணாதுரை.

அதை ஈ.வெ.ரா.,வின், "விடுதலை' பத்திரிகையில் வெளியிட முனைந்தார். ஈ.வெ.ரா., வும், "கட்டாயம், எழுத வேண்டும்; விடாதே!' என்றார். காரணம், பிராமணர்களுக்கு தானம் கொடுத்த முத்தையா செட்டியார், தன், "விடுதலை' பத்திரிகை வளர்ச்சிக்கு பணம் தரவில்லையே என்ற கோபம். அண்ணாதுரை எழுதிய தலையங்கம் அச்சு கோர்க்கப்பட்டு, அச்சு எந்திரத்திலும் ஏறி விட்டது. அப்போது பார்த்து, முத்தையா செட்டியாரிடமிருந்து அறுபதாம் ஆண்டு நிறைவு விழா பரிசாக ஈ.வெ.ரா.,வுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, "செக்' வந்து விட்டது. உடனே அண்ணாதுரையை அழைத்து, "அந்த தலையங்கத்தை அச்சிடாதே!' என்றார் ஈ.வெ.ரா., அண்ணாதுரை சம்மதிக்கவில்லை; "எழுதியது எழுதியதுதான்!' என்றார்.

"சரி; சரி; அதே கருத்தை நானே தலையங்கமாக எழுதி விடுகிறேன்...' என்று கூறி, உப்புச்சப்பு இல்லாமல், வழ, வழ... கொழ, கொழ என்று ஒரு தலையங்கத்தை எழுதி வெளியிட்டார் ஈ.வெ.ரா., காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!


நன்றி: தினமலர்-வாரமலர்
நிரபராதி

துக்கம் தொண்டை அடைக்கறது. எவ்வளவு சமாதானம் சொல்லியும் என்னால் ஏத்துக்க முடியலை. ரெண்டு வருஷமா ஒழச்சு இருக்கேன். சாப்பாடு தூக்கம்னு பாத்ததில்ல. சினிமாவே கெடயாது. க்ரிக்கெட்டு கூட இல்ல. இவ்ளோ ஒழச்சும் பலனில்லயேன்னுதான் வருத்தமா இருக்கு. நான் செய்யாத பாவத்துக்கு ஏன் தண்டனை? இதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? இந்த நேரம் பாத்து டிவில அழுகை நாடகம் ஓடிண்டு இருக்கு. எனக்கு மேல யாரோ அழுதுண்டே இருக்கா. அம்மா கீரை நறுக்கிண்டே அவாள வாய்க்கு வந்தபடி திட்டிண்டு இருக்கா. சித்தப்பா ஸாயங்கால ஸந்தியாவந்தனம் பண்றா. அக்கா இப்போதான் துர்க்கைக்கு வெளக்கு போட போயிருக்கா. பாட்டி ரேழிலேந்து கொரல் குடுக்கறா. இதுக்கு நீ என்னடா கண்ணா பண்ணுவ. நீ செய்ய வேண்டியத எல்லாம் சரியா செஞ்சுட்ட. அதுக்கப்பறம் எல்லாம் பகவான் செயல். க்ருஷ்ண பரமாத்மா கீதைல என்ன சொல்லிருக்கார்? கடமையை செய்; பலனை எதிர்பாராதேன்னுன்னா சொல்லிருக்கார். அதுனால நீ கவலப்படாத. இவ்ளோ சொல்லியும் என்னால ஜீரணிக்க முடியல. அழுதுண்டே அடுத்தது என்ன நடக்கும்னு யோசிக்கறேன். அப்பா இன்னும் வரலை. வந்தா என்ன சொல்வாளோன்னுதான் பயமா இருக்கு. அப்பா எப்போதுமே என்னத்தான் கொற சொல்லுவா. என்னோட தப்பு இல்லேன்னா கூட. புள்ள கொழந்தேள அப்டிதான் வளக்கனுமாம். இல்லேன்னா கெட்டுப்போயிடுவாளாம். என்ன கணக்கோ, பகவானுக்குத்தான் வெளிச்சம். எப்பப் பாத்தாலும் படி படின்னு சொல்லிண்டே இருப்பார். ஆகாரம் ஆச்சான்னு கூட கேக்க தோணாதோ? அடுத்தாத்து கொழந்தேள பாரு எப்டி படிக்கறான்னு நீயுந்தான் இருக்கியே ஒன்னுக்கு யோக்யதை இல்லன்னு எதாச்சும் பாட்டு விழுந்துண்டே இருக்கும். எனக்கு யாரையாச்சும் கம்பேர் பண்ணி பேசினாலே பிடிக்காது. ஆனா அதுதான் எப்போதும். சரி என்ன பண்றது. இன்னிக்கு எல்லாம் சேந்துண்டு வரப் போறது. ஒரே அழுகை அழுகையா வர்றது. என்னோட தப்பே இல்லியே. இழப்பு என்னமோ என்னோடது. இதுல இவா வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சற மாதிரி. பகவானே!

பாட்டிக்கு இதெல்லாம் தெரியாம திருப்பியும் சமாதானம் சொல்றா. இப்போ என்ன ஆயிடுத்துன்னு கன்னத்துல கை வெச்சுண்டு இருக்க? அது என்னமோ கம்பியூட்டருக்கு படிச்சா என்ன கொறஞ்சா போறது? எதோ படிச்சோமா போணோமான்னு இல்லாம. அழுதுண்டு கண்ண கசக்கிண்டு பொம்மணாட்டி கொழந்தையாட்டம். போடா போ. கோயிலுக்கு போயிட்டு வா கோவிலுக்கு போயிட்டு வந்தா எல்லாம் சரியா போயிடும்னு பாட்டி சொல்லிண்டு இருக்கும் போதே அப்பா வந்துட்டார். கண்ணத்துலயே ரெண்டு உட்டார். நா என்னோட தப்பு இல்லியேப்பான்னு சொல்றத மீறி அடிக்கறார். நீ இன்னும் ரெண்டு மார்க்கு கூட எடுத்து இருந்தா உனக்கு கெடச்சு இருக்கும். எங்க நம்ம சொல்றத கேட்டாதான. தானா எதாச்சும் பன்றது. போ போ என்னமோ பன்னு. எல்லாம் உன் நல்லதுக்குதான் சொன்னேன் கேட்டாதான. சொல்லிண்டே இருக்கும் போது அடிக்க வற்ரார். அம்மாவும் பாட்டியும் வந்து தடுக்க அவாளுக்கும் திட்டு விழறது. நல்ல வேளையா ரவி மாமா வந்துட்டார். அப்பாடா இப்போதக்கி அடியிலேந்து தப்பிச்சோம். தெரு கோவில் திருநாள் பத்திரிக்கை ப்ரூஃப் எடுத்துண்டு வந்துர்க்கார் போலருக்கு. ரவி மாமாக்கு நெலம புரியாம என்னடா அம்பி +2ல 1100க்கு மேல வாங்கி ஜமாய்ச்சுட்ட போலருக்கே. எனக்கு தெரிஞ்சவா எல்லாரும் ரொம்ப கம்மியாதான் வாங்கிருக்கா. என்னமோ கணக்கு பரிட்சை கூட ரொம்ப கஷ்டமா இருந்துதாமே. நீ புத்திசாலிடா கொழந்தே. நன்னா இருன்னு சொல்லின்டே அப்பாகிட்ட பேச போனார். பத்திரிக்கைல ஒரே ஒரு திருத்தம் சொன்னார் அப்பா. திரு. மணி அப்டின்னு அடிச்சு இருக்கறத "மணி அய்யர்" ன்னு அடிக்கனுமாம். 'பளார்'னு அடிக்கனும் போல இருந்துது. பகவானே! இது என்னோட தப்பே இல்லியே. என்ன ஏன் தண்டிக்கற? திரும்பவும் அதே யோஜனை. எனக்கே தெரியாமல் மீண்டும் அழ ஆரம்பித்தேன்.

************************************************************************************

இது என்னுடைய முதல் முயற்சி.
இனி தேவை முறையான பயிற்சி.


மீண்டும் சந்திப்போம்.
ரஜினிகாந்த்: இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

ஒரு முறை, இரு முறை அல்ல; மற்றுமொரு முறை என்று செல்கிறது ரஜினியின் அரசியல் ப்ரவேச அறிவிப்பு கணக்கு. மீண்டும் ஒரு முறை ரஜினியின் அரசியல் ப்ரவேசம் குறித்து செய்திகள் வெளியாகி, அதற்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து மறுப்பு வெளியிட்டு இருக்கிறார். இது அவரது சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக இருந்தாலும், கொஞ்சமாவது தமிழக மக்களை மனதில் கொள்ள வேண்டாமா? என்ன கொடும சார் இது? நீங்கள் நீங்கள் மட்டுமாக இருக்கும் வரையில் தொந்தரவு இல்லை. தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள். சினிமாவில் உங்கள் முட்டாள்தனமான வசனங்களை ரசித்த குற்றத்திற்கான தண்டனையா இது? "நா ஒரு தடவா சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி". யோவ், ஒரு தடவ சொல்லும் போது ஒரு தடவதான் சொன்னா மாதிரிதான். தண்ணி அடிச்சு இருந்தீங்களா என்ன? எப்டி நூறு தடவ சொன்னா மாதிரி இருக்கும். உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? இல்ல சைடிஷ்ஷா? இந்த வடிகட்டின பைத்தியக்காரத்தனத்த சினிமாவோட நிறுத்திகிட்டா போதாதா? எதுக்கு பொதுவாழ்க்கையிலயும்? தமிழக மக்கள் ஏற்கனவே ரொம்ப நொந்து போயாச்சு. இதுல இவரோட அலம்பல் வேற.

இவர் ரசிகர்களை சந்திக்க போகிறார்; சந்தித்து அரசியல் ப்ரவேசம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போகிறார் என்ற செய்தி மூன்று வாரங்களுக்கு முன்பே வட்டமடிக்கத் துவங்கியாயிற்று. மூன்று வாரங்கள் மெளனம் காத்துவிட்டு இப்போது அறிக்கை வெளியிட்டு இருப்பது ஒரு குழப்பவாதியின் தெளிந்த ஏமாற்று வேலை. இவருக்கு உண்மையாகவே அரசியல் ஆசை இல்லேன்னா இந்த செய்தி வந்த உடனேயே மறுப்பு வெளியிட்டு இருக்கனும். மூனு வாரமா என்ன சார் செய்துகிட்டு இருந்தீங்க? இமயமலை போயி கபிலமுனி கிட்ட ஆசிர்வாதம் கேட்டீங்களா? அவர் உங்ளுக்கே அல்வா குடுத்துட்டாரா? அது பரவாயில்ல. இப்போ வெளியிட்ட மறுப்பு செய்தியில் கூட தன்னுடைய சாமர்த்தியமான பைத்தியக்காரத்தனத்தோட சினிமாவையும் கலந்துதான வெளியிட்டு இருக்காரு. "இவரு வந்தா யாராலயும் தடுக்க முடியாதான்" எந்த நம்பிக்கையில இவரு இப்டி சொல்லலாம்? எல்லாம் நம்ம மக்க மேல இருக்கற அசட்டு நம்பிக்கதான். தமிழக மக்கள் இப்போவாவது முழிச்சுக்கனும். இனிமே ரஜினிகாந்த் பத்தி அரசியல் செய்தி வந்தா புறக்கணிக்கனும். அவர் அரசியலுக்கு நெசமாவே வந்தா அவரையே புறக்கணிக்கனும். இந்த சமயத்துல ஜெயகாந்தனுடைய "நடிகர்களின் சமுதாய பங்கு" பற்றிய கட்டுரைய பதிவு செய்தா ரொம்ப நல்லா இருக்கும். தேடிப் பார்க்கிறேன். இருந்தா பதிவு செய்யறேன்.

குசேலனில் இவர் உண்மையை சொல்லி இருக்கிறாராம். "இதற்கு முன் திரைப்படங்களில் பேசிய வசனமெல்லாம் ஒரு வசனகர்த்தாவோ இயக்குனரோ எழுதி கொடுத்து பேசினாராம்". ஏன் சார் அந்த மாதிரி வசனம் எழுதும் போது உங்க புத்தி எங்க போச்சு? உங்களுக்கு தமிழ் தெரியாதா? அப்போ தமிழ் மக்கள வெச்சு சம்பாதிக்கறத்துக்காக என்ன வேனா பேசுவீங்க. சுயபுத்தி இல்லாம காசு பாத்தா போதும் உங்களுக்கு. ஒரு பரபரப்ப உண்டாக்கனுன்னா பொது மேடையில "அவங்கள ஒதச்சா என்னன்னு" பேசுவீங்க. யாரு கண்டா? அது கூட யாராச்சும் எழுதி கொடுத்து பேசினேன்னு சொல்லி சுலபமா தப்பிக்கலாம். இந்த அறிக்கையும் ஒரு வேளை யாராச்சும் எழுதி கொடுத்துதான் வெளியிட்டு இருக்கிறாரோ என்னமோ? அடுத்த படம் "இயந்திரன்" வர்ற வரைக்கும் பொறுக்கனும். ஏன்னா இதுக்கான விளக்கம் அதுல தான் வரும். அப்புறம் அதுக்கு அடுத்த படத்துல "முன்னாடி படத்துல பேசினது ஒரு ரோபோ. அதுக்கு சொந்த புத்தி கிடையாது. அதுனால அத நம்பாதீங்க".. அப்டின்னு சொல்லுவார். என்ன ஒரே தில்லாலங்கடியா இருக்கு.

கடைசியா ஒரு வரி. ரஜினிகாந்த் பாணியில் சொல்ல வேண்டுமானால்:

இன்னும் தமிழ் மக்கள் இந்த நடிகரை நம்பினால், "தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது".
Kalpathy Bhajanotsavam 2008: கல்பாத்தி பஜனோத்ஸவம்

நான் திரு. உடையாளூர் கல்யானராமன் (Sri Udayalur Kalyanaraman) மற்றும் அவருடைய மிருதங்க வித்வான் திரு. பாபு ராஜசேகரன் (Sri Babu Rajasekaran) அவர்களின் ரசிகன். சில நிகழ்ச்சிகள் உங்கள் விருப்பப்படி எதிர்பாராதவிதமாக நடக்கும். அது போன்றது தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. தொடர்வது, பஜனோத்ஸவ புகைப்படங்கள்.











இளமையில் காதல் - பழைய எழுத்து - கவிதை (14)

பழைய எழுத்து

இளமையில் காதல்

பேதை மனம் போதையில் ஏதேதோ உளரும்
பருவம் பறந்து சென்று பால்நிலா மீதமரும்
நினைவு நீரில் நடக்கும்
கனமும் கனவு கதை சொல்லும்
எண்ணம் எங்கெங்கோ சிதறும்
அந்தி பகல் பாராது அடம்பிடிக்கும் நெஞ்சம்

பூமி ஆழம் பார்க்கத் தோன்றும்
வானம் தொட்டுப் பார்க்கத் தூண்டும்
சலனம் சித்து வேலை செய்தாலும்
புத்தி புகழ்பாடும் அதை

பார்வை பாதியாய் போக
புது வழி தேடும் விழி
அறிவு அகழ்ந்தாலும் வாராது
துணிவு மட்டும் எங்கிருந்தோ வந்திடும்

தனிமை சுகம் தரும்
தட்டுப்படுவன எல்லாம் தலைகீழாய்

கேள்விகளுக்கெல்லாம் கேள்விகளாகவே பதில்
மனம் ஆடும் பாடும்
அறிவுரை மட்டும் அடங்காது அதில்
குழப்பம் குடை பிடிக்கும் எல்லாவற்றிலும்
உங்களுக்குமா என்ன?

இதெல்லாம் மதுவால் அன்று
மது மிஞ்சும் மாதுவால்.