Pages

காதறுந்த செருப்பு

காதறுந்த செருப்பு
கனவில் வந்தபோது
காதோரம் சொன்னது
இது தான்...
அடிப்பதற்காவது என்னை வைத்துக்கொள் என்று
அதன் மீதிருந்த கோபம்
அதிகமானதென்னவோ
அப்போதுதான்.

மனித ராசி -- ஜே. ஜே. சில குறிப்புகள் நூலிலிருந்து...

சுந்தர ராமசாமி அவர்களின், 'ஜே. ஜே. சில குறிப்புகள்' நூலிலிருந்து (பக்கம் 131):

............. காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி, பாதை விளிம்பில் நின்றுகொண்டு சூரியோதயத்தைப் பார்த்தேன். உள்ளங்கால் கூசும்படி விளிம்புக்குச் சென்றேன். முன்னால் அதல பாதாளம். அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக் கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது. அதிகாலையிலும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறு விதமாகவும், கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும், முடிவற்ற அழகுகளை அள்ளி இறைத்துக் கொண்டும் கடவுள் மனிதன் முன் வருகிறார். தனது விசுவரூபத்தை மனிதனுக்குக் காட்டக் கடவுள் வருகிறார். இருந்தும் மனிதன் பார்ப்பது இல்லை. பழக்கத்தில் அறிவையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் முற்றாக இழந்து, தரித்திரத்திலும் பரம தரித்திரனாக நிற்கிறான். ஒவ்வொரு நாளும் இந்த விசுவரூப தரிசனத்திலிருந்து நாம் பெறக்கூடியவற்றில் மேலான ஞானம் லகுவாகவும் பக்குவமாகவும் நமக்குக் கிடைக்கும். வேறு எதிலிருந்தும் பெற முடியாத ஞானம் இதிலிருந்து பெற முடியும். இவ்வளவு நாட்களும் இதற்கு ஆட்பட மறுத்து ஏழ்மைப்பட்டுப்போனதை நினைத்து வருத்தமடைந்தேன். இனியேனும் எனக்கு இந்த நித்தியப் பரவசம் கிடைக்கட்டும். மனித ராசிக்குரிய விஷேஷ சொத்துக்களை நான் சேர்த்துக் கொள்ளாவிட்டால் என் பிறப்பு அர்த்தமற்றது.

கணத்துக்குக் கணம் அசைவின்றி மேலெழுந்து வருகிறது அது. புன்னை மரங்களிடையே ரச்மிகள் ஊடுருவி, சிதறிய கண்ணாடித் துண்டுகள் உருகி வழிகின்றன. அந்த உருகி வழியும் கண்ணாடிதான் என் கனவுகள் என்று நான் சொல்லிக் கொள்கிறேன். கனவுகளில் ஆத்மா கொள்ளும் ஆனந்தத்தில் பலம் பெற்று நடமாடிக் கொண்டிருக்கிறான் மனிதன். அந்த ஆனந்தங்களைக் கல்லிலோ வர்ணங்களிலோ மரத்திலோ பாட்டிலோ தேக்கி வைக்க முற்படுகிறான். ஒரு கனவைச் சொல்ல முற்படும் போது எப்போதும் அவன் தெரிந்து கொள்வது கனவைச் சொல்ல முடியவில்லை என்பதுதான். இதனால் அவனுக்கு ஏற்படும் விசனம் சொல்லத்தரமன்று. உடல்கூடித் திளைப்பவர்களிடங்கூடச் சொல்ல முடியாத இந்தச் சங்கடத்தை அவன் உலகுக்கு எப்படி எடுத்துச் சொல்ல முடியும்? இருந்தாலும் அவன் சொல்ல முற்படுகிறான். மீண்டும் கனவைச் சொல்ல வந்தவன் கனவைச் சொல்ல முடியவில்லை என்பதை மீண்டும் சொல்லிவிட்டுப் போகிறான். மீண்டும் சொல்ல முற்படிகிறான். சொல்லாமல் அவற்றைப் புரியவைக்க ஏன் அவனுக்குத் தெரியவில்லை? புரியவைக்க சொல்லப்பட வேண்டுமா? இந்தத் தவறான எண்ணம் எப்போது அவனுக்கு ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? இன்னும் கனவுகளின் விளிம்புகள் கூடச் சொல்லில் வகைப்பட்டு வரவில்லை. இந்தக் கனவுகள் அவற்றின் அர்த்தத்தை நம்மிடம் சொல்ல நாம் அவற்றை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. நனவுகளையும் நாம் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. நிம்மதியாக அவற்றை விட்டுவிட நம்மால் முடிவதில்லை. துடுப்புப் பிடிக்கும் நீரில் முகம் பார்க்கத் துடிக்கிறோம். நீச்சலடித்துக் கொண்டே முக்குளிக்க முயல்கிறோம். எப்படிக் கூடும் இது? 'இப்படிக் கேட்டால்?' என்று கேட்கிறார்கள் என் நண்பர்கள். எப்படிக் கேட்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லையே. விடை தெரியவில்லை என்பதில் கூட எனக்கு வருத்தம் இல்லை. கேள்விகள் கூட என்னிடம் உருக்கொள்ளவில்லை. இப்போது நான் இங்கு இருந்து கொண்டிருப்பது, என் முன் விரிந்து கிடக்கும் இந்த உலகம், மனித ஜீவங்கள், அவற்றின் அசைவுகள், இயற்கை, இயற்கையின் கோலங்கள் எல்லாவற்றின் மீதும் எனக்குத் திகைப்பு ஏற்படுகிறது. இந்த வித்தை எப்படிச் சாத்தியம்? அடிப்படையாக இதை ஒப்புக் கொண்டு விட்டதாக எடுத்துக்கொள்ள என்னால் முடிவதில்லை. எனக்கு பெரும் திகைப்பாக இருக்கிறது. ஒரு கணம் கூட இடைவெளி இன்றித் திகைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்தத் திகைப்பினால் எனக்குப் பெரும் பரபரப்பு ஏற்படிகிறது. இதைத் தவிர வேறொன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ..........

அழுதழுது பேய் போல்...

"...அழுதழுது பேய்
போல் கருத்தில்
எழுகின்ற வெல்லாம்
என்னதறியாமை
அறிவென்னுமிரு
பகுதியால் ஈட்டு
தமிழென்
தமிழினுக்கின்னல்
பகராது உலகம்
ஆராமை
மேலிட்டிருந்தலால்..."

---- தாயுமானவ சுவாமிகள்

அடி ஓலவாயி...

மாமன் பொண்ணிருக்கு, அத்த மகளிருக்கு
அவளயெல்லாம் விட்டுப்புட்டு
மக்குப்பய மனசுக்குள்ள
உன் நெனப்பு ஏனிருக்கு?

அடி ஓலவாயி
வார்த்த ஒழுகும் ஓட்டவாயி
உன்னப்போல ஆள எங்கயும்
நான் பார்த்ததில்ல தாயி

ஊரு கத பேசுற
ஒறவு கத பேசுற
உன் கத என் கத கேட்டா
என்னையே நீ ஏசுற

வாய மூடமாட்ட
வம்பு சண்ட விடமாட்ட
ஒத்த சொல்லு நான் கேக்குறேன்
அந்த சொல்லு சொல்லமாட்ட

கொஞ்சிப் பேசயில
மிஞ்சி ஏசையில
மிஞ்சி ஒன்னு போட்டுவிட
கெஞ்சுதடீ என் மனசு

இப்போதும் ஒரே கேள்வி; நான் யார்?

இது என் நண்பி ப்ரீத்தி எழுதிய ஒரு பதிவின் தொடர்ச்சியாக நான் எழுதியது.


என்னைக் கிடத்திப் போட்டிருக்கையில்
என்னையே கடத்தியதென் பிம்பம்.
எப்போதும் நடத்திய வேள்வி,
இப்போதும் ஒரே கேள்வி; நான் யார்?
இருக்கையில் இல்லாது போலும்,
இருக்கின்றனர் என் மக்கள்.
ஒருமையில் ஒளிய இடம் தேடுகிறேன்.
இரைதேடும் புலி கண்டு
இறைவேண்டி ஓடும் மான் போல ஓடுகிறேன்.
துரத்துவது யாரென்றறியேன்;
பயமுறுத்துவது ஏதென்றும் அறியேன்.
என்னில் என்னை ஒளித்தாலொழிய, அது நடவாதென்பதும் மறந்தேன்.
உண்மை என்னைச் சுட ஒரு நாளாகுமோ?
மெதுவாகத்தான் தெரிந்தது.
நிஜத்தை நேரில் சந்திப்பதுதான்,
நிஜம் என்று மனம் புரிந்தேன்.
அடடா! எத்துனை நேரம் புரியாமல் தவித்தேன்!
ஒருவேளை இதுதான் எங்கள் முதல் சந்திப்போ?
மனமொன்று கூற, மதியொன்றுரைக்க,
நிஜத்திற்கு பொய்(ச்) சாட்சி சொல்லியபடி,
என் மனைவியை நெருங்கினேன்.
பேதைப்பெண்ணோ என் பிம்பம் பார்த்து
கதைத்துக்கொண்டிருந்தாள்.
எனைப்பார்த்து அழும் விழிக்கு,
அணைபோட நான் முயல,
முடியாமல்தான் கலங்க,
கண்ணீர் அவள் கன்னம் கரைத்துக்கொண்டிருந்தது.
எதிரியும் புகழ்பாட,
எரிதிரியும் சில்லென்றிருக்க,
அப்போதுணர்ந்தேன் அகில உறவை அறுத்துவிட்டேனென்று!