Pages

"நேரு காலத்து நினைவுகள்"

எம்.ஓ.மத்தாய். இவர் ஒரு மலையாளி. மறைந்த பிரதமர் நேருவின் நேரடி உதவியாளர். நேருவின் மறைவிற்கு பல ஆண்டுகளுக்குப் பின், "நேரு காலத்து நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதி பரபரப்பு ஏற்படுத்தியவர். நேருவின் அந்தரங்கங்களை அறிந்தவர் இவர் என்பதால், இந்தப் புத்தகம் வெகு வேகமாக விற்பனையாகித் தீர்ந்தது.


அப்புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி: நேரு 1947ல் குளிர் காலத்தில் லக்னோவுக்கு வருவதாக இருந்தார். சரோஜினி நாயுடு, அப்போது உ.பி., ஆளுனராக இருந்தார். பத்மஜாவை நேரு திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு வதந்தியை பரப்பினார். பத்மஜாவும் மிக பரபரப்போடு இருந்தார். ஆனால், லேடி மவுண்ட் பேட்டனுடன், நேரு வந்து சேர்ந்ததும், சீறினார் பத்மஜா. உடனே, அவர் நேருவின் வீட்டிற்கு வந்து, பக்கத்து அறையில் தங்க ஆரம்பித்தார்.


"இவர் இப்படியே நிரந்தரமாக தங்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?' என்கிற நிலைமை ஏற்பட்ட போது, "கிழக்கிந்திய நாடுகளுக்கு சுற்றுலா போகும் வழியில் நேரு வீட்டில் தங்குவார் மவுண்ட் பேட்டனின் மனைவி...' என்று பத்மஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே கோபித்துக் கொண்டு வெளியில் போய் தங்கினார் பத்மஜா. இந்திராவைக் கூப்பிட்டனுப்பி, தனக்கு நேரு எழுதிய கடிதங்களை எல்லாம், தான் திருப்பிக் கொடுக்க விரும்புவதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னார் பத்மஜா!
உடனே, என்னிடம் வந்து இந்த விஷயத்தைச் சொன்னார் இந்திரா. நான் சிரித்தேன்!
ஒரு வருடம் சென்றதும், நேருவின் படுக்கை அறையில் லேடி மவுண்ட் பேட்டனின் இரண்டு புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து தன் படம் ஒன்றையும் நேரு பார்க்கும்படியாக மாட்டி வைத்தார் பத்மஜா; ஆனால், அதை அப்புறப்படுத்தி விட்டார் நேரு.


காசியிலிருந்து 1948ல் டில்லி வந்தார் ஷாரதா மாதா என்ற பெண் சந்நியாசி. அவருக்கு பேட்டியளித்தார் நேரு. ரொம்ப அழகாக, இளம் வயதில் இருந்தாள் சந்நியாசி. அதன் பிறகு அவள் அடிக்கடி நேருவைப் பார்க்க வந்து போய் கொண்டிருந்தாள்.
ஒருநாள் திடீரென்று மறைந்து விட்டார் ஷாரதா மாதா. 1949 நவம்பரில் பெங்களூரில் இருந்து கன்னி மடத்தினர், ஒரு கட்டுக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் கொடுத்தனுப்பினர்.
வட மாநிலத்திலிருந்து தங்கள் கன்னி மடத்திற்கு ஒரு பெண் வந்தாள் என்றும், அவள் ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள் என்றும், தான் யார் என்று சொல்ல மறுத்து விட்டாள் என்றும், குழந்தையையும், இந்தக் கடிதக் கட்டையும் அங்கு விட்டு விட்டு, எங்கோ போய் விட்டார் என்றும், இந்தியில் எழுதப்பட்ட கடிதங்கள் பிரதம மந்திரியால் எழுதப்பட்டவை என்று அறிந்து, அனுப்பியுள்ளதாகவும், கன்னி மடத் தலைவி (வெளிநாட்டு மாது) வந்தவரிடம் குறிப்பு அனுப்பி இருந்தார்.


இந்த விஷயங்கள் நேருவுக்குச் சொல்லப்பட்டன. அவர் கடிதங்களை வாங்கிக் கிழித்தெறிந்தார். சுபாஷ் சந்திரபோஸைப் பற்றிய ஒரு சம்பவம் இப்போது என் ஞாபகத்துக்கு வருகிறது. போசுடன் கூட இருந்த ஏ.ஸி.என்.நம்பியார் என்னிடம் சொன்னார் : ஜெர்மனியில், போசுடன் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு ஆஸ்திரியப் பெண், போஸ் மூலம் கருவுறவே, கருச்சிதைவு செய்ய வேண்டும் என்று நினைத்தார் போஸ். ஆனால், அவள் கருவுற்று பல மாதங்களாகி விட்டபடியால் கருச்சிதைவு ஆபத்தெனக் கருதப்பட்டது. அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் போசுக்கு விருப்பமில்லை. சீக்கிரமே, ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் ஜெர்மனியை விட்டு ஜப்பான் சென்று விட்டார் போஸ்.


இந்தியாவை விட்டு லேடி மவுண்ட்பேட்டன் போன பிறகும், நேருவுக்கு கடிதங்கள் எழுதுவார். "அவருக்கு' என்று போடப்பட்டு வரும் அந்தக் கடிதத்தை மட்டும் பிரிக்க எங்களுக்கு உரிமை கிடையாது. அதை நேருவே நேரடியாக பிரித்து படிப்பார்.


—பெரிய இடத்து சமாச்சாரங்கள் இப்படித்தான் இருக்கும் போலும்!

Thanks: Dinamalar Varamalar

No comments: