Pages

இந்தியர்கள் அமெரிக்காவில் இன்னொரு கூவம் ஏற்படுத்துகிறார்களா?

எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன்.

என் வலைப்பதிவு இத்தனை நாட்கள் அமைதியாகவே இருந்திருக்கிறது. அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து. எழுதுவதற்கு ஒன்றும் இல்லையா? அதெல்லாம் ஒன்னுமில்ல. சோம்பேறித்தனம். யார் யார் மேலயோ கோபம், வெறுப்பு, ஆத்திரம். எழுதல. வெறுப்புல நீ ஏன்டா எழுதலைன்னு கேக்கறீங்க. அட, நான் எதுவுமே உருப்டியா செய்யல. அதுல ஒன்னு எழுதல. சரி விடுங்க. அது நான் மேல்படிப்பு முடித்து வேலை தேடி அல்லாடிய காலம்.

நம்ம ஊர்ல ஒரு நெனப்பு. என்னமோ அமெரிக்கா வந்துட்டா எல்லாம் சுலபமா அமைஞ்சுடும் அப்டின்னு. என்னுடைய அனுபவத்துல இனிமே யாராச்சும் அமெரிக்கா வர்றதுக்கு வழி கேட்டா, தம்பி ஊர்லயே இருந்துடுங்க அப்டின்னு சொல்லிடுவேன். ஏன்னா இங்க வந்து படுற பாடு பட்டவனுக்குத்தான் தெரியும். இதுல கொடுமை என்னன்னா, நாம இத சொன்னா: தோ பார்றா அங்கபோயி நல்ல சம்பாதிச்சுட்டு பேசறான் பாரு அப்டின்னு சொல்றானுங்க.

சார் நெசமாத்தான் சார் சொல்றோம். இங்க படிக்க வர்றவனுங்க பாதி பேர் சுயமரியாதய தொலைச்சுட்டு, இந்த ஊர்க்காறன ஏமாத்திட்டுதான் வேல செய்ய வேண்டி இருக்கு. இது கிட்டத்தட்ட ஒரு சுத்தம் செய்ய முடியாத கூவம் போலத்தான் இருக்கு. உண்மைய சொல்லட்டுமா? நம்புவீங்களா?

முதல் கட்டம்: இந்தியாவிலிருந்து அமெரிக்கா படிக்க வருகிறான் ஒரு இளைஞன்.

இந்தியாவிலிருந்து ஒரு இளைஞன் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட கனவுகளொடும் கற்பனைகளொடும் வந்து சேர்கிறான். இங்க ஒரு நல்ல யுனிவர்சிடில படிச்சா ஓகே. லுச்சாவா இருந்தா அவ்ளோதான். இங்க வர்ற பசங்களுக்கு அவனவனுக்கு ஏத்தா மாதிரி ஒரொரு கனவு. சில பேர் நெசமாவே படிக்க வர்றான். சில பேர் காசு வேணும்னு வர்றான். அட இன்னும் சில பேர் நல்ல பொண்ணு கெடைக்கும்னு வர்றான். இங்க வர்ற பாதி பேருக்குத்தாங்க படிக்க அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்குது. நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா ஊக்கத்தொகை, ஸ்காலர்ஷிப், இல்ல என்னமோ ஒன்னு. அதாவது ஒரு பேராசிரியர் கிட்ட ஆராய்ச்சியோ, இல்ல உதவியாளரா இருந்து படிக்கறத்துக்கு பண உதவி கெடைக்கறது. அப்டி கெடைச்சுட்டா ஓகே. இல்லேன்னா ரொம்ப கஷ்டம். ஏன்னா இந்த ஊர்ல நம்மளால செலவு செஞ்சு படிக்க முடியாது (அட்லீஸ்ட் நடுத்தர வர்க்கத்துனால).

இந்த மாதிரி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்கலேன்னா என்ன செய்யறான் நம்ம ஆளுன்னுதான் கேள்வி? யாருக்காச்சும் தெரியுமா?

நம்ம ஊர்ல சொல்லும் போது பெருமையா நான் வெளில பார்ட் டைம் வொர்க் செஞ்சு படிக்கறேன்னு சொல்றது. அது அமெரிக்கால சட்ட விரோதம்னு யாருக்காச்சும் தெரியுமா?(யுனிவர்சிடில பார்ட் டைம் வேல செய்யறது ஓகே. வெளில வேல செஞ்சா அது தப்பு). ஏதோ ஒரு சதவிகிதம் பேருக்குத்தான் தெரியும்னு நெனைக்கறேன். ஏன்னா சமீபத்துல விஜய் டிவி "காபி வித் அனு" ப்ரோக்ராம் பாத்தேன். அதுல வந்த தன்வி (ஏ. ஆர். ஆஸ்தான பாடகி: முன்பேவா என் அன்பேவா...) சொல்றாங்க: "அமெரிக்கால நான் க்ரோஸரி ஷாப்ல வேல செஞ்சுகிட்டேதான் படிச்சேன்" அப்டின்னு. அது இங்க இருக்கறவங்ளுக்கு தெரியும் சட்ட விரோதம்னு.

இப்டி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்காதவன் என்ன செய்யறான்? மளிகை கடைலயோ, இல்ல பெட்ரோல் பங்க்லயோ இல்ல வேற எதாச்சும் கடைலயோ வேல செய்யறான். எப்டின்னு கேட்டீங்கன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க. 12 மணி நேரம் நிக்கறான் சார். ஒரே எடத்துல. இவனுக்கு சம்பளம் ஒரு மணி நேரத்துக்கு 6 டாலர் (எடத்துக்கு எடம் மாறுபடும்). வார நாட்கள்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நிக்கறான்னா... வார இறுதில 12 மணி நேரம். இதுல என்ன சார் பிரச்சன அப்டின்னு கேக்கறது காதுல விழுது. நம்மாளு ஆறு டாலருக்கு வேல செய்யறதால உள்ளூர்க்காரனோட வேல போயிடுது. இங்க எப்டின்னா... ஒரொரு மாநிலத்துலயும் குறைந்தபட்ச ஊதியம் அப்டின்னு வெச்சுருக்கானுங்க. ஆனா நம்மாளு 10 டாலர் வாங்கற எடத்துல 6 டாலருக்கு வேல செய்யறான். இவன் போனா போன செய்ய வேண்டிய வேலை மட்டும் செய்யறதில்ல. சுயமரியாதய தொலச்சுட்டு கக்கூஸ் கழுவற வேலை வரைக்கும் செய்யறான். மொதல்ல கொஞச நாளைக்கு அத்தியவசிய தேவைக்காக வேல செய்யறவன் பிறகு காசு மேல ஆச வந்து முழுக்க முழுக்க தொழிலாளி ஆயிடறான். கேட்டா வேற வழி இல்ல அப்டிங்கறான். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேல செஞ்சா இவன் எங்க படிக்கறது. அப்புறம் கொஞ்ச நாள்ல ஏதோ பாஸ் பன்னினா போதும் சாமின்னு வெளில வர்றான்.

இவனுங்கள்ல பல பேர் இந்த ஊர் போலிஸ்கிட்ட மாட்டிக்காம இருக்கறதும் இல்ல. அப்பப்ப எவனாச்சும் மாட்டிகிட்டேதான் இருக்கான். ஆனா சட்டவிரோதமா வேல செய்யறவன் எண்ணிக்கை மட்டும் கொறயல. இங்க வந்து ரெண்டு வருஷம் ஆன பசங்க அது என்னமோ தப்பே இல்லைங்கற மாதிரி ஒரு தப்பான தோற்றத்த ஏற்படுத்தி நம்மாளயும் இந்த மாதிரி ஆக்கிடறான். இதுல தப்பிச்சு வர்ற பசங்க கம்மிதான். நானும் ஒரு அஞ்சு நாள் வேலைக்கு போனேன். அப்றம் இந்த மனசாட்சி சும்மா இருக்காம திரும்பி வந்துட்டேன்.

இவ்ளோ கஸ்டபட்டு படிச்சு வெளில வந்து அவன் என்ன பண்றான்னு நீங்க கேக்கனும். நீங்க கேக்கலைன்னாலும் நான் சொல்லத்தான் போறேன். மீண்டும் சந்திப்போம்.
வெண்பா முயற்சி...தளை தட்டி....தலையிலயே தட்டுதுப்பா...

இப்போதுதான் வெண்பா பற்றி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வெண்பா இலக்கணம் சிறுவயதில் படித்ததுதான் என்றாலும் நிறைய மறந்துவிட்டேன். மறந்துவிட்டேன் என்பதை மறந்துவிட்டு எழுத ஆரம்பித்திருக்கக் கூடாது, ஒரிரு முறை படித்து தெளிவு பெற்றிருக்க வேண்டும். இப்போது என்னுடைய வெண்பாக்களை சரிபார்க்க ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் விக்கீ மற்றும் தமிழார்வலர்களின் வலைப்பதிவுகள் (http://payananggal.blogspot.com/) மிகவும் உதவியாக இருக்கின்றன. சரிபார்த்துவிட்டு மீண்டும் தொடர்வேன். இப்போதைக்கு டாடா.

வெண்பா முயற்சி - கவிதை (7, 8, 9, 10)

தொடரும் வெண்பா....

தேடி எடுத்துவிட்டேன். எங்கோ பத்திரமாக வைக்கவேண்டும் என்று, வைரமுத்து கவிதைகள் புத்தகத்தில் வத்திருக்கிறேன் போலும். அல்ல, என் வெண்பாக்களை வைரமுத்து சரிபார்த்துச் சொல்லட்டும் என்று வைத்திருந்தேனோ என்னவோ. எதுவாயினும் சரி, தொடர்ந்து படியுங்கள்.

வெண்பா இரண்டு

புடம் போட்டுப் பார்த்தாலும் ஓர்
இடம் இல்லை ஐயத்திற்கு - தடம்
மாறா எனக்கு காதலும் உயிரும்
வேறா கா தென்றும்.

வெண்பா மூன்று

காத்திருக்கும் நேரம் நொடிப் பொழுதாயினும்
பூத்திருக்கும் பூ உலர்ந்திடுமோ? - ஏத்திவைத்த
மனது தவிக்குமோ அல்ல தவிர்க்குமோ
எனது நேர ஒழுக்கமோங்குக.

வெண்பா நான்கு

கரம் கொடு காதலே எனக்கொரு
வரம் கொடு தினமும் - சிரம்
முழுதும் உன் நினைவே என்னகம்
எழுதும் ஆயிரங் கனவே.

வெண்பா ஐந்து

ஆயிரம் ஆண்டுகள் மறவா உனை
பாயிரங் கொண்டு பாடவந்தேன் - தீயிடம்
இட்டு சுட்டாலும் என் தமிழ்ப்
பாட்டு என்றும் உனைப்பாடும்.

படிப்பவர்களில் வெண்பா புலமை இருப்பவர்கள் அருள்கூர்ந்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். கற்றுக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

வெண்பா முயற்சி - கவிதை (6)

வெகு நாட்களாக இருந்த வெண்பா முயற்சி

வெகு நாட்களாக எனக்கு வெண்பா எழுத வேண்டும் என்று ஆசை. எவ்வளவுதான் புதுக்கவிதை போல எழுதினாலும் இலக்கணம் கொண்டு எழுதும் போதுதான் ஒருவனுடைய கவியார்வம் முழுமை அடையும் என்பது என் தாழ்மையான கருத்து (மாற்றுக் கருத்து இருப்பது நியாயமே). என்னைப் பொறுத்த வரை நினைத்ததை எழுத்தில் வடிப்பது சுலபம். ஆனால் சில கட்டுப்படுகளுக்கும், வரைமுறைகளுக்கும் உட்பட்டு ஒரு கருத்தை எழுதுவது எல்லாராலும் இயலாது. மேலும் இதில் சுவாரஸ்யமான மற்றும் சவாலான விஷயம் என்னவென்றால், இலக்கணம், அழகு, கருத்து இவை மூன்றும் சேர்ந்து இருக்கவேண்டும்.

சரி, இப்போது என்னுடைய முதற் முயற்சியைப் பாருங்கள். இது சரியா என்பது தெரியாது. சரியாக இருப்பது போன்று தோன்றினாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. நன்கு அறிந்தவர்கள் இருந்தால் என்னைத் தெளிவுபடுத்தவும்.

இனிமேலும் காத்திருக்க என்னா லியலாது
கனிமொழி பேசும் காரிகையே - தனியே
விழியோரம் ஓரிடம் கொடு ஒருநாள்
மொழிவேனென் காத லுனக்கு.

இது போன்று மொத்தம் ஆறு பாடல்கள் எழுதினேன். ஆனால் அந்த காகிதம் தொலைந்தாயிற்று. கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

சிந்தையில் இனித்தது... - கவிதை (5)



இன்றைய தினமலரில் வெளியான புகைப்படம் (நன்றி: www.dinamalar.com)

ஆடை கிடையாது
அது என் வறுமை.
ஈடு இணையேது உனக்கு
இன்று ஆடையாகு நீ எனக்கு.

மழை நூலெடுத்து
இழை தொடுத்து
ஆடை நெய்து, ஆனந்தக்கூத்தாடப்
புறப்பட்டுவிட்டேன்.

இயற்கையோடு இயைந்து
மழையோடு குழைகிறேன்
இனி எந்நாளில் வருமோ?
இந்த கனிச்சுவைக் களிப்பு.

வானம் தொடுக்கும் அம்புகள்
என்னைத் துளைக்கட்டும்.
பரவாயில்லை
இது ஆனந்தப் போர்க்களமே.
ஒவ்வொரு அம்பிலும் நான்
மறுபிறவி கொள்கிறேன்
ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள்
எனக்கு மழையின் பரிசு.

காய்ந்த நிலத்தில்
நீரள்ளித் தெளித்தால் தெரியும்
எவ்வளவு வேகமாக ஆட்கொள்ளுமென்று
நீ என்னையும் அது போலவே ஆட்கொண்டு ஆள்.